பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

628

விந்தன் கதைகள்

ம், இப்போது மட்டும் என்ன? இவரைப்போல் நானும் மறுமணம் செய்துகொண்டால் இவர் வேண்டாமென்றா சொல்லப் போகிறார்?

இப்படி அவள் மருகிக் கொண்டிருந்தபோது, யாரோ வந்து கதவைத் 'தடதட' வென்று தட்ட, "யார் அது?" என்று கேட்டுக்கொண்டே சென்று அவள் கதவைத் திறக்க, "ஸ்ரீமதி ஹேமா சீனிவாசன் நீங்கள்தானே?" என்று கேட்டான், அந்த வட்டத்துக்குப் புதிதாக வந்திருந்த தபாற்காரன்.

'இன்னும் சீனிவாசன் என்ன வேண்டி யிருக்கிறது, சீனிவாசன்! ஸ்ரீமதி ஹேமா என்று மட்டும் சொன்னால் போதாதோ?' என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டு, "ஆமாம், என்ன விஷயம்?" என்றாள் அவள், எரிச்சலுடன்.

"ஒன்றுமில்லை. உங்களுக்கு இருநூறு ரூபாய் மணியார்டர் வந்திருக்கிறது; இங்கே கையெழுத்து போடுங்கள்" என்று மணியார்டர் பாரத்தை நீட்டி, அதற்கென்று அந்தப் பாரத்தில் விட்டு வைத்திருந்த இடத்தைக் காட்டினான் அவன்.

"சரிதான், நான் சொன்னபடி வீட்டைக் காலி செய்ய விரும்பாத எவனோ வாடகைப் பணத்தை மணியார்டரில் அனுப்பி வைத்திருக்கிறான் போலிருக்கிறது? இருக்கட்டும், இருக்கட்டும்!" என்று கருவிக்கொண்டே அவன் காட்டிய இடத்தில் கையெழுத்தைப் போட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு அவள் திரும்பினாள்.

"இந்தாருங்கள், உங்கள் பெயருக்கு ஏதோ ஒரு கடிதம்கூட வந்திருக்கிறது!" என்றான் தபாற்காரன், ஒரு கவரை எடுத்து நீட்டி,

"சரி, கொடு!" என்று அதையும் வாங்கிக்கொண்டு உள்ளே வந்து உட்கார்ந்தாள் அவள்.

நல்ல வேளையாக அந்தக் கடிதத்தின் முகவரி, 'ஸ்ரீமதி ஹேமா சீனிவாசன்' என்று ஆரம்பமாகவில்லை; 'ஸ்ரீமதி ஹேமா' என்று மட்டுமே ஆரம்பமாகியிருந்தது. அதில் ஒரு திருப்தியுடன் கடிதத்தைப் பிரித்துப் படித்தாள் அவள்;

"அடி, ஹேமா!.....

எடுக்கும்போதே 'டி' போட்டுக் கடிதம் எழுதும் இவள் யாராயிருக்கும்? கடைசி வரியைப் பார்த்தாள்; 'கலா' என்று போட்டிருந்தது. 'ஓ, இவளா! அந்த நாள் பள்ளிக்கூடத்து 'டி'யை இவள் இன்னும் விடவில்லை போலிருக்கிறது!' என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு மேலே பார்த்தாள்: