பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

630

விந்தன் கதைகள்

நின்றுகொண்டிருந்த தன் மகனையும் அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் கலா.

"எனக்குக்கூடச் சொல்லாமலா?" என்றாள் ஹேமா, வியப்புடன்.

"சொன்னால் நீ வந்திருக்கவா போகிறாய்? மற்றவர்களோடு சேர்ந்து நீயும் சிரித்திருக்கப் போகிறாய்!"

"இப்போது மட்டும்......?"

"நீ சிரிக்கமாட்டாய்; அதற்குப் பதிலாக அழுவாய் என்று எனக்குத் தெரியும்!"

"ஏன் அழுகிறேனாம்?"

"தனிமை அப்படிப்பட்டதடி, தனிமை அப்படிப் பட்டது! அதனால்தான் காலேஜில் நம்மோடு படித்துக் கொண்டிருந்த வாசு, 'கலைக்கும் இலக்கியத்துக்கும் மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் காதலை விட்டால் வேறு கதி கிடையாது!" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான். அதன் உண்மையை இப்போதாவது உணருகிறாயா, நீ?"

"உணர்ந்தேன், உணர்ந்துதான் இருக்கிறேன்!" என்ற ஹேமா, அதற்குள் தன் கண்களில் துளிர்க்க ஆரம்பித்து விட்ட நீரைத் துடைத்துக்கொண்டே வந்தவர்களை உபசரித்து வழி அனுப்பிவைத்தாள்.

அவர்கள் சென்றதும் கதவைத் தாளிட்டு விட்டு வந்து உள்ளே படுத்த அவளுக்கு என்னவோபோலிருந்தது. 'கலா இப்போது மாதம் தவறாமல் அமாவாசை விரதம் இருக்க மாட்டாள்; வருடம் தவறாமல் திதி கொடுக்க மாட்டாள்' என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டாள்.

அந்தச் சமயத்தில் கதவை யாரோ தட்டுவது போலிருக்கவே, "இதில் ஒன்றும் குறைச்சல் இல்லை!" என்று அலுத்துக்கொண்டே சென்று கதவைத் திறந்தாள் ஹேமா; வாசலில் நின்றுகொண்டிருந்த வாசு, "இப்போதாவது நான் உள்ளே வரலாமா?" என்றான் அவளை ஏற இறங்கப் பார்த்தபடி.

'அவனை அப்போது அங்கே கொஞ்சமும் எதிர்பார்க்காத ஹேமா, 'வா!' என்றும் சொல்லவில்லை, 'வரவேண்டாம்!' என்றும் சொல்லவில்லை; திறந்த கதவைத் திறந்தபடி விட்டுவிட்டு உள்ளே வந்தாள்.