பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறுபடியும்.....

633

'இங்கே இருந்தால் இவர் இப்படித்தான் என்னைப் பார்த்துப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருப்பார்' என்று தனக்குத் தானே முணுமுணுத்த வண்ணம் அந்தப் படத்தைக் கழற்றி எடுத்துக்கொண்டு போய்ப் பரண்மேல் வைத்துவிட்டு, "அன்பில் இவருக்கு ஒன்றும் குறைந்தவனல்ல, அந்த வாசு! அன்று அவன் என் இன்பத்தில் பங்கு கொள்ள வந்தான்; நான் மறுத்தேன்; அப்போதும் அவன் என்மேல் கொண்ட அன்பு மாறவில்லை. இன்று அவன் என் துன்பத்தில் பங்கு கொள்ள வந்தான்; நான் மறுத்தேன்; இப்போதும் அவன் என்மேல்... சொல்லிக்கொண்டே தன் அறைக்குச் சென்று பீரோவின் கண்ணாடிக்கு முன்னால் நின்றாள். நின்று, "ஸ்ரீமதி ஹேமா வாசுதேவன் நீங்கள் தானே?" என்று தன்னைப் பார்த்துத் தானே தன் பெயரை மாற்றிக் கேட்டாள்; "ஆமாம், நான்தான்!" என்று அதற்குப் பதிலையும் தனக்குத் தானே தயங்காமல் சொல்லிக்கொண்டு வெளியே வந்தாள்.

"டாக்ஸி கொண்டு வரட்டுமா, நாளைக்கு?"

நூறாவது நாள், நூறாவது தடவையாக இந்தக் கேள்வியைக் கேட்டு வைத்தான்-அப்போது சொல்லி வைத்தாற்போல் அங்கே வந்து நின்ற வாசு.

இப்போது, "ஏன்?" என்று கேட்கவில்லை அவள்; "எதற்கு?" என்றும் கேட்கவில்லை அவள், "கொண்டு வா!" என்று சொல்லிவிட்டாள்; ஆம், சொல்லியே விட்டாள்!

அவ்வளவுதான்; வானத்துக்கும் பூமிக்குமாகத் துள்ளித் துள்ளிக் குதித்துக்கொண்டே சென்றான் அவன்!

மறுநாள் காலை; மணமகள் போல் தன்னைத்தானே அலங்கரித்துக் கொண்ட ஹேமா, டாக்ஸி வந்து வாசலில் நிற்கும் சத்தத்தையும், அதிலிருந்து வாசு இறங்கிக் கதவைத் தட்டும் சத்தத்தையும் எதிர்பார்த்தபடி, கூடத்தில் நடை போட்டுக் கொண்டிருந்தாள்.

அவளுக்குள்ள வேகம் அவனுக்கும் இருக்காதா? எதிர் பார்த்தது எதிர்பார்த்தபடி டாக்ஸி வந்து வாசலில் நின்றது; அதிலிருந்து இறங்கிய வாசு, கதவைத் தட்டும் சத்தமும் கேட்டது.

அவ்வளவுதான்; பறந்து போய்க் கதவைத் திறந்தாள் ஹேமா. என்ன ஆச்சரியம்! வந்தது வாசு அல்ல; கலா!

கலா என்றால் சுமங்கலி கலா அல்ல; அமங்கலி கலா!

"மறுபடியும்........"