பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

640

விந்தன் கதைகள்

நின்றாள். அவளிடம் இருபது ரூபாயை எடுத்துக் கொடுத்தார் அவர். அதைப் பெற்றுக் கொண்டு அவள் அவரை வணங்க, அவர் அவளையும் ஆசீர்வதித்து அனுப்பினார்.

அப்போது வழக்கம் போல் அன்றைய தினசரிப் பத்திரிகைகள் இரண்டைக் கொண்டு வந்து அவருக்கு முன்னால் வைத்து விட்டு அந்தத் தபாற்காரப் பையன் திரும்பினான்.

"ஏண்டா, வேட்டி துண்டு இல்லா விட்டாலும் உனக்குத் தீபாவளி இனாமாவது வேண்டாமா?" என்றார் அவர்.

"மன்னியுங்கள், சார்! என் அப்பாதான் 'தன்னை மதிக்கத் தெரியாதவ'ராக வாழ்ந்து விட்டார், நானாவது 'என்னை மதிக்கத் தெரிந்தவ'னாக வாழ வேண்டாமா, சார்?-அதிலும் இந்த இனாம் இருக்கிறதே இனாம், அது பிறரை மதிக்க, பிறருக்கு மரியாதை காட்டத்தான் உதவுகிறதே தவிர, மதிக்க தனக்கு மரியாதை காட்டிக் கொள்ள உதவுவதில்லை, சார் அப்படி நீங்கள் என்னை வாழ்த்தத்தான் வேண்டுமென்று நினைத்தால் 'மனம் உயர' என்று வாழ்த்துங்கள், சார்" என்று சொல்லிக்கொண்டே வந்து அவன் அவரை வணங்கி நின்றான்.

"அது என்ன மனம் உயர?" என்றார் அவர், ஒன்றும் புரியாமல்.

"அவ்வை 'வரப்புயர' என்று ஒரு சமயம் யாரையோ வாழ்த்தவில்லையா, சார்? அந்த மாதிரிதான் இதுவும். வரப்புயர்ந்தால் நீர் உயரும்; நீர் உயர்ந்தால் பயிர் உயரும்; பயிர் உயர்ந்தால் களத்தில் நெல் உயரும்; நெல் உயர்ந்தால் மக்கள் உயர்வார்கள்; மக்கள் உயர்ந்தால் மன்னன் உயர்வான்; மன்னன் உயர்ந்தால் நாடு உயரும்; நாடு உயர்ந்தால் உலகம் உயரும். அதே மாதிரி மனம் உயர்ந்தால் மானம் உயரும்; மானம் உயர்ந்தால் மரியாதை உயரும்; மரியாதை உயர்ந்தால் தன்னம்பிக்கை உயரும்; தன்னம்பிக்கை உயர்ந்தால் ஒருவன் இன்னொருவனிடம் எதற்கும் தலையைச் சொறிந்து கொண்டு நிற்கமாட்டான் அல்லவா?" என்றான் அவன்.

இப்போது அவருக்குப் புரிந்து விட்டது - அவன் 'முந்திய பாரதத்தினன்' அல்ல, 'இளைய பாரதத்தினன்' என்று. அதற்குமேல் அவர் அவனை ஒன்றும் கேட்கவில்லை; அவன் விரும்பியபடியே 'மனம் உயர' என்று மட்டும் அவனை வாழ்த்தி அனுப்பினார்.