பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வேதாந்தம்

....கறார் கருப்பையா அன்றும் வழக்கம் போல் சர்க்காரைத் திட்டிக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்தார். "என்ன சர்க்கார் வேண்டிக் கிடக்கிறது? சுதந்திர சர்க்காராம், சுதந்திர சர்க்கார்; தேசம் சுதந்திரம் அடைந்தால் மட்டும் போதுமா? தூங்குவதற்குச் சுதந்திரம் வேண்டாமா? இத்தனை மணிக்குத்தான் கடையைத் திறக்க வேண்டும், இத்தனை மணிக்குத்தான் கடையை மூட வேண்டும், இன்ன கிழமைதான் கடைக்கு வார விடுமுறை விடவேண்டும்-இதெல்லாம் என்ன திட்டம், என்ன சட்டம்? இதுவா வியாபாரத்திற்கு அழகு? இதுதான் போகட்டும் என்றால் மனிதனை மனிதன் நம்ப வேண்டாமா? எல்லாவற்றுக்கும் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டுமாம், கணக்கு!"சரி;அப்படியே வைத்துக் கொள்கிறோம் என்றால், அத்துடன் விடுகிறார்களா? தங்களுடைய சிப்பந்திகளை அனுப்பி பரிசோதனை செய்யச் சொல்கிறார்கள்! அந்தப் பயல்களை சரிப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது!" என்று தமக்குள் முணுமுணுத்துக் கொண்டே அவர்தம் மீது கிடந்த போர்வையை எடுத்து வீசி எறிந்தார்.

அந்தச் சமயத்தில், "உன்னிடம் குற்றம் இல்லாதவரை நீ யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை" என்று அவருடைய பத்து வயதுப் பையன் ஏதோ ஒரு பாடத்தை அழுத்தந்திருத்தமாகப் படித்து உருப்போட்டுக் கொண்டிருந்தான். அதைக் கேட்ட கருப்பையாவுக்கு ஏனோ ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. "படித்துக் கிழித்தது போதும், எழுந்து போய் வேலையைப் பாருடா!"என்று அவனை அதட்டி விட்டுக் குளிக்கும் அறையை நோக்கி நடந்தார்.

வாசலில் நின்றபடி, "ஸார், ஸார்!" என்று அவரை யாரோ கூப்பிட்டார்கள்.

கருப்பையா விரைந்து சென்று, கதவைச் சற்றே திறந்து மெல்ல எட்டிப்பார்த்தார்.

'குமாஸ்தா வேலையைத் தவிர வேறு எந்த வேலைக்கும் லாயக்கில்லை' என்று தம்பட்டம் அடிக்கும் தோற்றத்துடன் கோபாலசாமி அங்கே நின்று கொண்டிருந்தான்.

"ஏன் ஐயா, இப்படிக் கூனிக் குறுகி நிற்கிறீர்? என்னிடம் நீர் பிச்சை கேட்கவா வந்திருக்கிறீர்? வேலை செய்து பிழைக்கத்தானே