பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விந்தன் எழுத்துகள் பற்றி...

தமிழ் எழுத்தாளர்களில் விந்தன் வித்தியாசமானவர்; பாதிப்புகளைக் கண்டு அஞ்சாத படைப்பாளி; எதிலும் எவரிடத்திலும் சமரசம் செய்து கொள்ளாத சுயமரியாதைக்காரர்; சுதந்திரமான சிந்தனையாளர்.

1942 முதல் 1975 வரையில் வணிக நோக்குடைய பல பத்திரிகைகளில் இலக்கிய நோக்குடன் ஏராளமான கதைகளை எழுதியுள்ளார் விந்தன்.

அக்கதைகளில் சிகரமாகவும் சிறப்புடையதுமான கதைகளைத் தேர்வு செய்து தரப்பட்டுள்ளது.

1946 இல் தமிழ் வளர்ச்சிக்கழகம் முதன் முதலாக வழங்க முன் வந்த பரிசை, விந்தனின் 'முல்லைக் கொடியாள்' என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கி பாராட்டியுள்ளது. நாற்பதாண்டு இலக்கிய வாழ்க்கையில் விந்தன், பெற்ற முதல் பரிசும் கடைசிப் பரிசும் அதுதான்.

தமிழ் கூறும் நல்லுலகமெங்கும் விந்தன் கதைகள் பரவிய காலத்தில், இந்திய மொழிகளில் சிலவற்றிலும் ருஷ்யா, செக்கோஸ்லேவியா ஆகிய மொழிகளிலும் விந்தன் கதைகள் பிரசுரம் ஆகின.

விந்தன் கதைகளில் உள்ள தனிச் சிறப்பு, அவர் ஏழை எளியவர்களைப் பற்றியும், அவர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்களைப் பற்றியும் எழுதியதோடு நடுத்தர மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பற்றியும், அவர்களுக்குப் பொருளாதார நெருக்கடியால் உண்டாகும் சிக்கல்களை, குடும்பச் சிதைவுகளை, காதல் தோல்விகளை, தாம்பத்திய முறிவுகளை அனைத்துக்கும் மேலாக நசிந்து வரும் மனித நேயத்தை யதார்த்தமாகவும் எள்ளல்தன்மையுடனும் எளிய தமிழிலும் எழுதியிருப்பது தான்.

விந்தன் கதைகள் முழுவதும் ஒரே நூலாக வரவேண்டும் என்பது வாசகர்களின் - ஆய்வாளர்களின் நீண்ட நாளைய கனவு. அந்த இலக்கியக் கனவை நல்ல நூல்கள் வெளியீட்டாளரான கலைஞன் பதிப்பகத்தின் எழுச்சி மிக்க இளைஞர் எம். நந்தா அவர்கள் நனவாக்கி விட்டார்கள். அவர்களின் இலக்கிய உள்ளத்துக்கு என் சார்பிலும், விந்தன் குடும்பத்தாரின் சார்பிலும் மனப்பூர்வமான நன்றியையும் வணக்கத் தையும் தெரிவித்துக் கொள்ளும் இந்நேரத்தில், ஏற்கெனவே விந்தனின் புகழ் பரப்பும் வகையில் 'மனிதன்' இதழ் தொகுப்பை வெளியிட்டுள்ள கலைஞன் பதிப்பகத்தார் மேலும் மேலும் விந்தன் படைப்புகளை வெளியிடுவதில் அக்கறையும் ஆர்வமும் காட்டுவார்கள் என்று நம்புகிறேன்.

தோழமையுடன்
மு.பரமசிவம்
(தொகுப்பாசிரியர்)