பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



368

விந்தன் கதைகள்

நீங்களும் நிறைவேற்றி வைப்பீர்களா?" என்று கேட்டாலும் கேட்பாளே!

"அதென்னமோ அப்பா நீங்கள் என்ன வேணுமானாலும் சொல்லுங்கள்; எனக்கு ராதாவைப் பிடிக்கவில்லை!"

முன்னாள் அமைச்சர் ரங்கநாதம் அவர்களின் ஏகபுத்திரன் ராஜகோபாலன் பிறந்ததிலிருந்தே பிடிவாதத்தை துணையாகக் கொண்டு வளந்தவன். பணமும் பாசமும் அதற்கு பக்கபலமாயிருந்து வந்தன. வழிவழியாக தாமும் தம்முடைய வம்ச பரம்பரையும் வாழ்ந்து வருவதுபோல் ராஜகோபாலனும் வாழவேண்டு மென்பதில் அடங்காத ஆசை கொண்டிருந்தார் அவர். வம்ச வழியை யொட்டி வராமல் அவன் எங்கே வழிதவறிவிடப் போகிறானோ என்று பயந்து, அல்லும் பகலும் அவர் அவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். இதுவரை அவர் எண்ணியபடியே அவன் பிறந்து வளர்ந்தாகிவிட்டது. இப்பொழுது 'கல்யாணம் செய்துகொள்' என்றால், பையன் என்னவெல்லாமோ பிதற்றுகிறானே?

இந்த விஷயத்தில் கடைசியாக அவர் ஒரு முடிவுக்கு வந்தார். அதன்படி, பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து, கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து தம்முடைய பிள்ளைக்குச் சென்னை சர்க்கார் காரியாலயத்திலேயே ஒரு பெரிய உத்தியோகத்தை வாங்கிக் கொடுத்தார். அதன் காரணமாகத் தன்னுடைய அத்தையின் வீட்டில் அவன் தங்க நேர்ந்தது. இதனால் அவனுடைய மகள் உஷாவுக்கும் தம்முடைய மகன் ராஜாவுக்கும் காதல் உதயமாகும், கல்யாணத்தால் அது அஸ்தமனமாகும் என்று ரங்கநாதம் எதிர்பார்த்தார். அம்மாதிரி எதுவும் நடக்கவில்லை; நடக்குமென்று தோன்றவும் இல்லை.

இத்தனைக்கும் தினசரி எத்தனையோ விதமாகத் தன்னை அலங்கரித்துக்கொண்டு உஷா அவனுக்கு காணாத காட்சியெல்லாம் தந்தாள்; பேசாத பேச்செல்லாம் பேசினாள்: ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினாள்; பாடாத பாட்டெல்லாம் பாடினாள். ஆனாலும் என்ன, அவளுடைய உடலழகைப் பொருட்படுத்தாமல் உள்ளத்தின் அழகைக் கண்டு பிடிப்பதிலே அவனுடைய கவனம் சென்று கொண்டிருந்தது.

ஒரு நாள் மாலை ராஜகோபாலன் வழக்கம்போல் வீட்டுக்குத் திரும்பினான். வீடு வெறிச்சென்றிருந்தது. சுற்று முற்றும் பார்த்தான். உஷா மட்டும் கூடத்தில் நின்று கொண்டிருந்தாள்.

"எங்கே, யாரையும் காணவில்லை!" என்று கேட்டான் ராஜகோபாலன்.