மிஸ் நளாயினி-1950
369
"என்ன என்னைக்கூடவா காணவில்லை!" என்று தன்னைத் தானே தொட்டுப் பார்த்துக் கொண்டு சிரித்தாள் உஷா.
அவளுடைய சிரிப்பு ராஜகோபாலனுக்கு நெருப்பாயிருந்தது. "உன்னைக் காணாமலென்ன? உன் அப்பாவையும் அம்மாவையும் காணோமே என்று கேட்டேன்" என்றான் அவன்.
"ஒ, அவர்களைக் கேட்கிறீர்களா?-அவர்கள் ஊருக்குப் போயிருக்கிறார்கள்!"
"எந்த ஊருக்கு?"
"திருநெல்வேலிக்கு?"
அவ்வளவுதான். அதற்குமேல் ராஜகோபாலன்தன்னை ஒன்றும் கேட்டுத் தெரிந்துகொள்ளும்படி அவள் வைத்துக் கொள்ளவில்லை. தன் பாட்டுக்கு சொல்லிக்கொண்டே போனாள்.
"அவர்கள் ஏன் திருநெல்வேலிக்குப் போயிருக்கிறார்கள் தெரியுமா?'- என் அப்பாவின் சிநேகிதர் வீட்டுக் கல்யாணத்திற்கு!”
"எப்போது வருவார்கள். தெரியுமா? - இரண்டு நாட்கள் கழித்து வருவார்கள்?"
"அவர்கள் என்ன சொல்லிவிட்டுப் போனார்கள் தெரியுமா?-வேலைக்காரியிடம் என்னைப் பார்த்துக் கொள்ளும் படி சொல்லிவிட்டுப் போனார்கள்; என்னிடம் உங்களைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டுப் போனார்கள்?"
அதுவரை நின்றது நின்றபடி அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ராஜகோபாலன் பொறுமையை இழந்தவனாய், "போதும், போதும்!" என்று சொல்லிவிட்டு, கோட்டைக் கழற்றி மாட்டிவிட்டுத் தன் அறைக்குள் சென்று உட்கார்ந்தான்.
காபியைக் கொண்டுவந்து அவனிடம் நீட்டினாள் உஷா. அதை வாங்கிக் குடித்துவிட்டு அவன் பேசாமல் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தான். காலி டம்ளரை எடுத்துக்கொண்டு போன உஷா சிறிது நேரத்திற்கெல்லாம் துள்ளிக் குதித்துக்கொண்டே திரும்பி வந்து, ராஜகோபாலன் முன்னால் ஒரு தினுசாக உட்கார்ந்தாள்.
அந்த நிலையில் அவளைக் கண்ட அவன் கையிலிருந்த புத்தகத்தை வீசி எறிந்துவிட்டு எழுந்து சென்றான்.
வி.க.-24