பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38O

விந்தன் கதைகள்

நான் படித்துப் படித்துச் சொல்கிறேன், கேட்டால்தானே?" என்றாள் அவள்.

"அது ஒன்றுதானே சுஜாதா, உன்னையும் என்னையும் இன்று வரை பிணைத்து வைத்திருக்கிறது!" என்று பரிதாபத்துடன் சொல்லிக்கொண்டே, தம் சட்டைப் பையிலிருந்த நாற்பது ரூபாயை எடுத்து கன்னையாவிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்டு அவன்தன் வீட்டை நோக்கி நடந்தான்-நடந்தானா!-இல்லை; நகர்ந்தான்.

அன்றிரவு 'கன்னையா தொலைந்தால் தொலைகிறான்- காதலுக்குத் தடையாயிருந்த ஊடல் தொலைந்ததே, அதைச் சொல்லு!' என்ற சந்தோஷத்தில் கட்டிலை நெருங்கிச் சுஜாதாவின் கன்னத்தை லேசாகத் தடவினார் ஹரன்.

அவ்வளவுதான் புற்றிலிருந்து கிளம்பும் ஈசல் போல அவள் 'புஸ்' என்று கிளம்பி, அவருடைய கையைத் தட்டி விட்டு, "என்ன தைரியம் உங்களுக்கு! 'அலோ' பண்ணுவதற்கு முன்னால் என் கன்னத்தில் நீங்கள் எப்படித் தொடலாம்? மனைவியென்றால் உங்கள் வீட்டுப் பொம்மையென்று நினைத்துக் கொண்டீர்களா, இஷ்டப்பட்ட போதெல்லாம் விளையாட? ஜாக்கிரதை" என்று உறுமினாள்.

தேள் கொட்டிய திருடனைப் போல், "இதென்னடா வம்பு! மழைவிட்டும் துவானம் விடவில்லையே?" என்று எண்ணியவராய் கையைப் பிசையும்போது அதிலிருந்த வைர மோதிரத்தைக் காணாமல் அவர் திடுக்கிட்டார். அடுத்த நிமிஷம் காலையில் ஸ்நானம் செய்யும்போது அதைக் கழற்றி அலமாரியில் வைத்த ஞாபகம் அவருக்கு வந்தது. ஒடிப்போய்ப் பார்த்தார். காணவில்லை. காணவேயில்லை!

திரும்பி வந்து, "ஏன் சுஜாதா, என் வைரமோதிரத்தைப் பார்த்தாயா?" என்றார்.

"அதைவிட வேறு என்ன வேலை, எனக்கு? மிஸ்டர் ஹரன். என்னை இன்னொருமுறை அப்படிக் கேட்காதீர்கள், ஆமாம்." என்று ஒரு முத்தாய்ப்பு வைத்துவிட்டாள் அவள்.

"சரி, எதற்கும் போலீஸுக்காவது போன் பண்ணி வைப்போம்" என்று அவர் 'ரெஸ்டை' நெருங்கினார்.