பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருடனுக்கு விடுதலை!

381

"இந்நேரத்தில் போன் எதற்கு!" என்று அதட்டிக் கேட்டாள் வள்ளி.

"வைர மோதிரம் காணாமற் போனதைப் பற்றி......"

"அவமானம்; இந்த அற்ப விஷயத்திற்காக இந்நேரத்தில் நீங்கள் போன் பண்ணப் பார்ப்பது அவமானத்திலும் அவமானம்!”

"அதனாலென்ன, போகிற மானம் இப்படியும் கொஞ்சம் போகத்தான் போகட்டுமே!" என்று அவர் பண்ணவேண்டிய போனைப் பண்ணிவிட்டு வெளியே சென்றார்.

அடுத்தாற்போல் தன் 'ப்ரெண்'டைச் சுஜாதா போனில் அழைப்பது ஹரனின் காதில் விழுந்தது. “கர்மம், கர்மம்!" என்று தலையில் அடித்துக்கொண்டே, ரேடியோவை திருப்பி வைத்துக் கொண்டு ஹாலில் உட்கார்ந்தார்.

"அப்பா!"

"..........."

"அப்பா!"

"............"

"அப்பா!"

“ஏண்டா, 'தொப்பா, தொப்பா'ன்னு அடிச்சுக்கிறே?"

"பொங்கல், அப்பா!"

"பொங்கலா! அது நம்ம வீட்டுக்கு வராது: அப்புறம்?"

"நிஜமாகவா? அப்பா?”

"ஆமாண்டா, ஆமாம்!”

இவ்வாறு சொல்லித் தன் பையனை விரட்டிவிட்டு கன்னையா சட்டையைக் கழற்றி கொடிமேல் வீசி எறிந்தான்.

"வந்ததும் வராததுமா குழந்தை மேலே ஏன் அப்படி எறிஞ்சி விழறீங்க?" என்றாள் அவர் மனைவி.

"எறிஞ்சி விழாம எடுத்து வைச்சிக்கிட்டு கொஞ்சவா சொல்றே?"