பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருடனுக்கு விடுதலை

385

தான் நினைத்தபடி, தன் வாழ்நாட்களிலேயே ஒரு நாள்-ஒரே ஒரு நாள்-அவன் சந்தோஷமாக இருந்து விட்டான்.

ஆனால் அந்த சந்தோஷத்தைப் பரிபூரணமாக அனுபவிக்க அவனை விடவில்லை அவன் மனைவி. இடையிடையே "இவ்வளவு பணம் உங்களுக்கு ஏது?" என்று அவள் கேட்டுக்கொண்டே இருந்தாள். "எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்!" "எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்!" என்று அவன் அதையும் சந்தோஷமாகவே சொல்லிக் கொண்டிருந்தான்.

அதற்குள் போலீஸார் வந்து அவனைக் கைது செய்தார்கள்; முகமலர்ச்சியுடன் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.

கோர்ட்டில் வழக்கு நடந்தது; ஆனால் தீர்ப்பு-அது தான் கன்னையாவுக்கு அதிசயமாயிருந்தது!

நீதிபதி சொன்னார்:

"கன்னையா திருடியது உண்மைதான். ஆனால் அவன் குற்றவாளி அல்ல!”

சர்க்கார் வக்கீல் கேட்டார்:

"உங்கள் தீர்ப்பு எனக்குப் புரியவில்லை; நீங்கள் சொல்வதைப் பார்த்தால் மிஸ்டர் ஹரன் குற்றவாளியா?"

"இல்லை......"

"பின் யார் குற்றவாளி?”

"மிஸ்டர் ஹரன் போன்றவர்களை இஷ்டம்போல் பணம் சேர்த்துக்கொள்ள அனுமதித்து, கன்னையாவைப் போன்றவர்களை என்றும் கஷ்டத்தில் ஆழ்த்துகிறதே சர்க்கார், அந்தச் சர்க்கார்தான் குற்றவாளி!"

நீதிபதி இவ்வாறு சொல்லக் கேட்டதும், "எஜமான். நான் இந்த உலகத்திலேயே இல்லைங்களா?' என்று கேட்டான் கன்னையா.

நீதிபதி சிரித்தார்.

கன்னையா அவருடைய கால்கள் பூமியில் பதிந்திருக்கின்றனவா என்று பார்த்தான்.

பிறகு தன்னையும், தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் ஒருமுறை கண்ணை கசக்கி விட்டுக்கொண்டு கவனித்தான். சந்தேகம் தீரவில்லை அவனுக்கு!

வி.க. -25