பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விந்தன் கதைகள் - 2
"தாயிற் சிறந்ததொரு..."

"பூலோகத்தில் பெண்ணாகப் பிறந்து நான் அனுபவிக்க வேண்டியவற்றை யெல்லாம் அனுபவித்து விட்டேண்டி; அம்மா! கடைசியாக ஒரே ஒரு ஆசை இருக்கிறது; அந்த ஆசை ஜானகிராமனுக்குக் கல்யாணம் செய்து வைத்துக் கண்ணுக் கழகாகப் பார்க்க வேண்டுமென்பதுதான்!" என்று அலமேலு அம்மாள் தன் ஒரே மகனைப் பற்றித் தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் அடிக்கடி சொல்லிக் கொள்வாள்.

ஜானகிராமனோ தனக்குத் தெரிந்த அரை குறையான உலகானுபவத்தைக் கொண்டு, தன் தாயார் உயிரோடு இருக்கும்வரை, தான் கல்யாணம் செய்து கொள்வது தனக்குக் கெடுதல், தன்னைத் தேடி வருபவளுக்கும் கெடுதல் என்ற விபரீதமான முடிவுக்கு வந்திருந்தான்.

இந்த முடிவை அவன் தாயாரிடமும் ஒரு நாள் நாசூக்காகத் தெரிவித்தான்: "என்னுடைய நன்மை எனக்குப் பெரிதல்ல. அம்மா! உன்னுடைய நன்மைதான் எனக்குப் பெரிது. உன்மீது கொண்டிருக்கும் அன்பில் இன்னொருத்தி பங்கு கொள்ள வருவதை நான் விரும்பவில்லை!" என்றான்.

"நன்றாயிருக்குடா, நீ சொல்வது! நான் இன்று போவேனோ, நாளை போவேனோ? நான் ஒரு சதமா உனக்கு? - அதெல்லாம் முடியாது; உனக்குக் கல்யாணத்தைப் பண்ணிவைத்து விட்டுத்தான் நான் கண்ணை மூடுவேனாக்கும்!" என்று பிடிவாதம் பிடித்தாள் தாயார்.

ஜானகிராமனின் பாடு தர்ம சங்கடமாகப் போய்விட்டது. அவன் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கல்யாணத்துக்கு ஒருவாறு சம்மதித்தான். அதன் பயனாக வைஜயந்தி அவனுக்கு மனைவியாக வந்து வாய்த்தாள்.

ஏறக்குறைய மூன்றுமாத காலம் அவர்களுடைய மண வாழ்க்கையில் குறையொன்றும் தெரியவில்லை; அப்படியே