பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



390

விந்தன் கதைகள்

"எல்லாம் சரியாய்ப் போய்விடும், மாமி!" என்று தேறுதல் சொன்னாள் சீதா.

நான் உள்ளே சென்றேன். ராதை கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தாள். தொட்டுப் பார்த்தேன். நல்ல காய்ச்சல்.

"மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மருந்து கொடுங்கள். ஆகாரம் "ஆரோரூட்" கஞ்சியைத் தவிர வேறொன்றும் கொடுக்க வேண்டாம்." என்று எச்சரித்து விட்டு, சீதா என்னைக் கண்டதும் 'விருட்'டென்று வெளியே போய்விட்டாள்.

"பகல் பன்னிரண்டு மணிக்குப் பள்ளிக் கூடத்திலிருந்து வரும் போதே குழந்தைக்கு நல்ல ஜூரம். சீதா தான் டாக்டர் வீட்டுக்கு அவளைக் கூட்டிக்கொண்டு போனாள். எனக்கென்ன கண்ணா, தெரிகிறது!" என்றாள் தாயார்.

அதற்குள் சங்கரன் கஞ்சியைக் காய்ச்சி எடுத்துக் கொண்டு வந்தான். அதை ஆறவைத்துக் குழந்தைக்குக் குளிப்பாட்ட முயன்றேன். அவள் குடிக்கவில்லை. "அம்மா, அம்மா" என்று அலறினாள்.

"உனக்கு அம்மா இல்லேடி, கண்ணு." என்று சொல்லிக் கொண்டே, கரை புரண்டு வந்த கண்ணிரைப் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள் தாயார்.

"ஏன் இல்லை? இப்பத்தான் என்னை டாக்டர் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனாளே, அம்மா!" என்றாள் குழந்தை.

"அந்த 'அம்மா' வாடி? இதோ அழைச்சிகிட்டு வறேன்!” என்று தட்டு தடுமாறிச் சென்று, எதிர் வீட்டுச் சீதாவை அழைத்து வந்தாள் அம்மா.

அவள் வந்து குளிப்பாட்டியபோதுதான் குழந்தை கஞ்சி குடித்தது!

சிறிதுநேரம் இருந்து, ராதை கண்ணயர்ந்த பிறகு சீதா போய்விட்டாள்.

அடுத்தபடி மருந்து கொடுக்கும் வேளை வந்தது. நான் கொடுக்க முயன்றேன். குழந்தை குடிக்கவில்லை. அதற்கும் சீதாதான் வரவேண்டியிருந்தது.

"ஐயோ, அவளுக்கு வேலை தலைக்கு மேலிருக்குமே” என்று அம்மா வருந்தினாள்.