பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நேற்று வந்தவள்

397

லலிதாவின் மீதோகாட்டவில்லை; தட்டுமுட்டு சாமான்கள் மேஜை, நாற்காலிகள், துணிமணிகள் ஆகியவற்றின்மீது காட்டிக் கொண்டிருந்தாள்!

எப்படியோ இராப்பொழுது பிழைத்துக்கிடந்தால் போதும் என்றுதான் தவித்துக் கொண்டிருந்தேன். மறுநாள் பொழுது விடிந்ததும் லலிதாவை ஊருக்கு அனுப்பி வைக்கும் காரியத்தில் முழுமூச்சுடன் ஈடுபட்டேன். எல்லா ஏற்பாடுகளும் ஒருவாறு முடிந்தன. 'டாக்ஸி' வர வேண்டியதுதான் பாக்கி; அடுத்த நிமிஷம் அதுவும் வந்து சேர்ந்தது.

"லலிதா, லலிதா!"

"ஏன், அண்ணா?"

"வண்டி வந்துவிட்டது. வந்து ஏறிக்கொள்!" என்று சொல்லிவிட்டு உள்ளே போனேன். பீரோவைத் திறந்து, லலிதாவுக்கென்று வாங்கி வைத்திருந்த புடவையை எடுத்தேன். சரசு ஒடோடியும் வந்து, அதை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு, "அவளுக்கென்று ஒருவன் வந்த பிறகுகூட நீங்கள் ஏன் புடவை எடுத்துக் கொடுக்க வேண்டுமாம்?" என்றாள் ஆத்திரத்துடன்.

அவ்வளவுதான், "நேற்று வந்தவள் நீ; என்னுடன் பிறந்து வளர்ந்தவள் அவள். உனக்கிருக்கும் உரிமை அவளுக்கு இல்லையா?” என்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டேன் நான்.

அதே சமயத்தில், “வரவில்லையா, அண்ணா?" என்று கேட்டுக் கொண்டே லலிதா அங்கே வந்துவிட்டாள்.

என்னுடைய நிலைமை தர்ம சங்கடமாகப் போய் விட்டது. "இதோ வந்து விட்டேன்!” என்று கூறிக் கொண்டே அவசர அவசரமாக அவள் கையிலிருந்த புடவையைப் பிடுங்கிக் கொண்டு வந்து டாக்ஸியில் ஏறிக் கொண்டேன்.

என் மனம் இன்னதென்று விவரிக்க முடியாத வேதனையில் சூழ்ந்தது; லலிதாவும் அதே நிலையில்தான் இருந்தாள் என்பது அவளுடைய முகபாவத்திலிருந்தே எனக்குத் தெரிந்தது.

"கூகுக்" என்று ரயில் கூவியதும், "போய் வருகிறாயாலலிதா?” என்று நான் அவளிடம் விடை பெற்றுக்கொண்டு திரும்பினேன்.

"இந்தப் புடவையையும் எடுத்துக்கொண்டுபோங்கள்!" என்றாள் அவள்.