398
விந்தன் கதைகள்
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. "ஏன் அம்மா, ஏன்?" என்று பதட்டத்துடன் கேட்டேன்.
"மன்னியை 'நேற்று வந்தவள்’ என்று நீங்கள் சொன்னால், என்னையும் 'நேற்று வந்தவள்’ என்று அவர் சொல்லமாட்டாரா, அண்ணா?" என்றாள் அவள்.
"நானாகவா சொன்னேன்? அவள் சொல்ல வைத்து விட்டாள்! அதனாலென்ன, இதை நீ எடுத்துக் கொண்டு போ!" என்றேன் நான்.
"வேண்டாம் அண்ணா! மன்னி சொல்வது போல் எனக்கென்று ஒருவர் வந்த பிறகுகூட நான் ஏன் உங்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் எடுத்துக் கொண்டு போங்கள்!" என்று அவள் புடவையை எடுத்து என் கையில் திணித்து விட்டாள்.
"லலிதா, லலிதா" என்றேன் நான்; வண்டி போயே போய் விட்டது.
வீட்டுக்கு வந்ததும் வராததுமாகச் சரசுவைக் கூப்பிட்டு, "இந்தா, இந்தப் புடவையை நீயே வைத்துக்கொள். உன்னுடைய லட்சணத்துக்கு உன்னை நான் 'நேற்று வந்தவள்’ என்று சொன்னால், அவளையும் 'நேற்று வந்தவள்’ என்று அவள் அகத்துக்காரர் சொல்வாராம்!” என்று சொல்லிக் கொண்டே, புடவையை வீசி எறிந்துவிட்டு, மாடிக்குச் சென்றேன். மத்தியானம் மணி வந்து சாப்பிடக் கூப்பிட்டான். "வேண்டாம்; எனக்கு என்னவோபோல் இருக்கிறது!" என்று சொல்லிவிட்டுக் குப்புறப் படுத்துக் கொண்டேன்.
அடுத்தாற்போல் சரசு வந்து, "எனக்கும் என்னவோ போலிருக்கிறது; மணியை அழைத்துக் கொண்டு நான் ஊருக்குப் போய் நாலைந்து நாட்கள் இருந்துவிட்டு வருகிறேன்!” என்றாள்.
"எங்கேயாவ்து போ, எப்படியாவது போ!" என்றேன் நான்.
அவள் போய்விட்டாள். "உனக்கு மனம் என்றுகூட ஒன்று இருக்கிறதா?” என்று எண்ணியது என் மனம். ஆனால் "எனக்கும் மனம் என்று ஒன்று இருக்கத்தான் இருக்கிறது!" என்பதை நாலைந்து நாட்களுக்குப் பிறகு அவள் நிரூபித்து விட்டாள்!
ஆம், ஊரிலிருந்து திரும்பி வரும்போது, அவனும் மணியும் மட்டும் வரவில்லை; அவர்களுடன் லலிதாவும் தன் கணவனுடன்