பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

402

விந்தன் கதைகள்

"வியாபாரத்தில் சபலச் சித்தம் கூடாது; திடச் சித்தம் வேண்டும்” என்பது என் அப்பாவின் சித்தாந்தம்.

இப்போது நான் அதை மீறியல்லவாகாரியம் செய்துவிட்டேன்?

இப்படி எண்ணிய வண்ணம் உட்கார்ந்திருந்தபோது கடை வாயிலில் வந்து நின்ற சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.

ஐயோ, அப்பா வந்துவிட்டாரா? -இல்லை, ராணிதான் காரிலிருந்து இறங்கி, 'அன்ன நடை'க்குப் பதிலாக 'யானை நடை' போட்டுக் கொண்டு வந்தாள்.

அவள் என் அத்தையின் ஏக புத்திரி; கலாசாலையில் படித்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய அம்மாவுக்கு என்மீது என்ன கோபமோ தெரியவில்லை. நாளது வரை ராணியை என் தலையில்தான் எப்படியாவது கட்டிவைக்க வேண்டும் என்று ஒரே பிடிவாதமாயிருந்து வருகிறாள். எனக்கோ அவளைப் பார்க்கும் போதெல்லாம் அச்சம் ஏன் தெரியுமா? - அக்கம் பக்கத்தில் யார் இருந்தாலும் சரி, அவள் முதலில் என் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டுத்தான் அப்புறம் ஏதாவது பேச ஆரம்பிப்பாள். இதில் ஒன்றும் குற்றம் இல்லைதான். ஆயினும் உண்மையான அன்புக்கு உள்ளேதான் இடமிருக்குமே தவிர, வெளியே இடமிராதல்லவா?

இந்த நிலையில் இருந்த என்னை இன்று அவள் நெருங்கியதும், நான் சுற்றுமுற்றும் பார்த்துத் திருடனைப்போல் விழித்தேன். அதிலும் மற்ற நேரங்களில் கடையின் குமாஸ்தாக்கள், பையன்கள் ஆகியவர்களில் பாதிப்பேர் ஏதேதோ காரியமாக வெளியே போய்விட்டிருப்பார்கள்; கடையிலும் அவ்வளவு வியாபாரம் நடந்து கொண்டிருக்காது. இப்போது என்னடாவென்றால் அத்தனை பேரும் கடைக்குள் அடைந்து கிடந்தார்கள்!அவர்களெல்லாம் போதாதென்று கடையில் வியாபாரம் வேறு பிரமாதமாக நடந்துகொண்டிருந்தது!

என்ன செய்வேன்?- என் உடம்போ சில்லிட்டுவிட்டது; உணர்ச்சியோகுன்றிவிட்டது. வலுவில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு, "வாராணி, வா!" என்றேன்.

அதைப் பொருட்படுத்தாமல், "ஹெல்லோ, ஹெள ஆர் யூ?" என்று எதிர்த்தாற்போல் இருக்கும் என்னைப் பார்த்த பிறகும், என்னைப்பற்றி அவசியமில்லாமல் கேட்டுக்கொண்டே, உணர்ச்சியற்ற என் கையைப் பிடித்து அவள் உணர்ச்சியுடன் குலுக்கினாள்.