பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

406

விந்தன் கதைகள்

அந்த முதியவருக்குப் பின்னால் ஒரு முதியவள், அவளுக்குப் பின்னால் ஒரு யுவதி, கடைசியில் அந்த நீலி அவள் என்னைப் பார்த்துவிட்டாள்.

அவ்வளவுதான்; "அப்பா, அப்பா! அவர் என்னை தனியே அழைத்து ஆறு கெஜம் மல் கொடுத்தனுப்பிய ஜவுளிக் கடைக்காரராச்சே, அப்பா! அவரைப் போய் 'பூட்டை உடைக்க யோசனையோ!' என்று கேட்கிறீர்களே?"என்று அங்கலாய்த்தாள் அவள்.

முதியவர் அசடு வழிய, "மன்னிக்கவேணும்; கோபித்துக் கொள்ளக்கூடாது!" என்று கெஞ்சிக் கொண்டே என்னை நெருங்கினார்.

"அதற்கென்ன, இந்நேரத்தில் இப்படி வந்து உட்கார்ந்திருந்தால் அப்படித்தான் தோன்றும்!" என்று நான் அவருடைய மனச் சாந்திக்காகச் சொல்லிவிட்டு அங்கிருந்து மெல்ல நகர்ந்தேன்.

"என்ன ரத்னா, இன்னும் ஏன் அங்கேயே நின்று கொண்டிருக்கிறாய்?-உள்ளே வந்து விளக்கை ஏற்று!" என்றார் முதியவர், இரண்டடிகள் எடுத்து வைத்த நான் என்னையும் அறியாமல் திரும்பிப் பார்த்தேன்; ரத்னா முகம் சிவக்கத் தன் அப்பாவுடன் திறந்த வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்!

அதே சமயத்தில் என் உள்ளத்திலும் அவள் நுழைந்து விட்டாள் என்பதை அப்போது நான் ஏனோ உணரவில்லை.

இரவு மணி பத்துக்கு மேலே இருக்கும். வீட்டை அடைந்தேன். எனக்காகக் காத்துக் கொண்டிருந்த அம்மா என்னைக் கண்டதும், "வாடா அப்பா!வந்துவிட்டாயா? அந்த மட்டும் என் வயிற்றில் பாலை வார்த்தாயே!” என்று கனிவு ததும்ப வரவேற்றாள்.

எடுத்தததற்கெல்லாம் நான் தற்கொலை செய்து கொள்வேனோ என்று அவளுக்குப் பயம்.

நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். அப்பா எங்கேயாவது கையைத் தீட்டிக்கொண்டு என் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாரோ என்றுதான்!-அவருக்குப் பதில் அவருடைய சயன அறையிலிருந்து அவர் குறட்டை விடும் சத்தந்தான் வந்துகொண்டிருந்தது. அதற்குள் அம்மா எனக்குச் சாதம் பரிமாறினாள். சாப்பிட்டு விட்டுப் படுக்கப் போனேன். அதே சமயத்தில் யாரோகதவைத் தடதட வென்று தட்டும் சத்தம் கேட்டது. விழுந்தடித்துக்கொண்டு ஓடினேன்.