பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

414

விந்தன் கதைகள்

ஊற்றினேன். குமட்டிக் கொண்டு வந்து விட்டது; வாயிலெடுத்து விட்டாள்;

உடனே ராணி முகத்தைச் சுளித்துக் கொண்டு, "சீச்சீ, இதென்ன நியூசென்ஸ்!" என்று எரிந்து விழுந்தாள். அதற்குள் வெந்நீர் கொண்டு வந்த ரத்னா கருணையின் வடிவாய் அம்மாவின் வாயைத் துடைத்துவிட்டு, அவளை மெல்லக்கீழே இறக்கி விட்டு, படுக்கையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்!

அப்போதுதான் அம்மாவின் வறண்ட வதனத்தில் என்றுமில்லாத ஜீவகளை தோன்றிற்று; அளவற்ற வாஞ்சையுடன் தட்டுத் தடுமாறி எழுந்து ரத்னாவை தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணிர் வடித்தாள்.

வெட்கத்தைத் தவிர வேறொரு ஆபரணமும் இல்லாத அவள் அதையே பெருமையுடன் பூண்டு, "வேண்டாம் மாமி, வேண்டாம். உடம்பை வீணாக அலட்டிக்கொள்ளாதீர்கள்"என்று எச்சரித்தபடி படுக்கையை சுருட்டி எடுத்துக் கொண்டு குழாயடிக்கு சென்றாள். அவள் தலை மறைந்ததும் "இவள் யார் என்று தெரியவில்லையே" என்றாள் அத்தை.

"இவளா! - இவள்தான் இந்த 'நியூசென்ஸ்'காரிக்கு மருமகளாக வரப் போகிறவள்!" என்றாள் அம்மா ஆத்திரத்துடன். இதைக் கேட்டதும் ராணி ஏதோ முணுமுணுத்துக் கொண்டே வெளியே சென்றாள். அவளைப் பின் பற்றி "மன்னிக்கு உடம்பும் சரியில்லை; மனமும் சரியில்லை", என்று மழுப்பிக் கொண்டே நாலுபேருக்கு முன்னால் போட்ட வெளிச்சமெல்லாம் போதும் என்று எண்ணியோ என்னமோ, அத்தையும் நழுவினாள்!

அதே சமயத்தில் ஏதோ காரியமாக ரத்னாவைக் கூப்பிட்டுக் கொண்டே கூடத்துக்கு வந்த அவளுடைய தகப்பனாரிடம், “இங்கே பாருங்கள்- இனிமேல் நீங்களும் நாங்களும் வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்தவர்களல்ல; எல்லோரும் ஒரே குடும்பந்தான்! இதோ நிற்கிறானே என் பிள்ளை, இவன் தான் உங்கள் வீட்டு மாப்பிள்ளை; ரத்னாதான் எங்கள் வீட்டு மருமகள்!"என்றாள் அம்மா.

"எல்லாம் அவன் செயல்!"என்றார் அவர்.