மயிலைக் காளைகள் இரண்டுக்கும் கோமாரி என்று கேள்விப்பட்டதிலிருந்து மன்னார்குடி மாணிக்கம் பிள்ளையின் மனம் சரியாகவே இல்லை. பொழுது விடிந்ததும் மாட்டு வைத்தியரை அழைத்துக் கொண்டு வந்து, அவற்றுக்கு வேண்டிய சிகிச்சையை அளிக்குமாறு பணித்துவிட்டு வெளியே வந்தார். பத்துப் பன்னிரண்டு பேர் அவருடைய வரவை எதிர்பார்த்து வாசலில் காத்துக் கொண்டு இருந்தனர்.
"என்னடாபயல்களா, என்ன சேதி?”
"பத்து நாளாப் பட்டினிங்க; பண்ணையிலே ஏதாச்சும்......"
"வேலைதானே ? அதற்குத்தான் இங்கே ஏகப்பட்ட ஆட்கள் இருக்கேடா!"
"முனியனுக்கு மூணு நாளாக் காய்ச்சல்னு கேள்விப்பட்டோம்......!"
"ஆமாம், அதற்கென்ன இப்போது?"
"அவனுக்குப் பதிலா எங்களில் யாரையாச்சும்.....!"
"ஓஹோ! அப்படியானால் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள்; கணக்குப் பிள்ளை அவனைத்தான் பார்க்கப் போயிருக்கிறார்; வரட்டும்!"
அப்படியே அவர்கள் ஒதுங்கி நின்றனர். அதே சமயத்தில் ஒதுங்காமலும், பதுங்காமலும், நிமிர்ந்த நடையுடனும் நேர் கொண்ட பார்வையுடனும் எசமான் வீட்டு நாய் அவர்களுக்கிடையே நுழைந்தது. அதைத் தொடர்ந்து கணக்கப் பிள்ளையும் வந்தார்.
"என்னய்யா, ஆளைப் பார்த்தீரா? என்ன சொன்னான்? இன்றாவது வேலைக்கு வரப் போகிறானா, இல்லையா?” என்றார் மாணிக்கம் பிள்ளை.
"அவன் எங்கே இனிமேல் வேலைக்கு வரப் போகிறான்?" என்றார் கணக்கப் பிள்ளை.
"ஏன் வாயைப் பிளந்து விட்டானா?”
"ஆமாம்."