பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

மேகம் போன்ற நடை, மெல்லிய பாலாடை போன்ற உடை, பொய்யோ எனும் இடை, பொலிவுமிக்கப்படை என்று புலவர்களால் வருணிக்கப் பெறும் பெண்கள், ஆனந்தக் களிப்பேறி விட்டால், பந்தை எடுத்துக்கொண்டு பலராய் கூடிநின்று ஆடுவார்கள், பாடுவார்கள், ஓடுவார்கள். அத்துடன் நிற்காமல் பந்தை இழந்துவிட்டும் தேடுவார்கள்.

ஆமாம், இவ்வாறு பந்தைத் தரையிலே மோதிக் குதிக்க விட்டு, காற்றிலே மிதக்க விட்டு, இன்பம் தங்களைத் துதிக்க விட்டு விளையாடும் அழகியர்கள் தாங்கள் ஆடிய பந்தை இழந்து விட்டு பட்ட பாடும், கெட்ட கேடும், பந்தை இழந்து விட்டு நின்ற கோலமும் கொண்ட சீலமும் போன்ற சூழ்நிலைகளை இதிகாசங்களில் நாம் நிறையக் காணலாம்.

பருவப் பெண்கள் பந்தைத்தான் ஆடி மகிழ்ந்தனர் என்றால், ஆடப்பெறும் பந்துகளோ, அவர்களது வாழ்வை எப்படி எப்படியெல்லாம் பந்தாடி இருக்கின்றன என்பதை அறியும்போது, நம்மையறியாமலேயே நாம் நெகிழ்ந்து விடுகின்றோம். நீண்ட பெருமூச்சு விடுகின்றோம்.

ஊராளும் மன்னன் மகள் அவள். ஒப்பற்ற அழகி, பெண்களே கண்டு பேராசை கொள்ளும் பேரழகி. அவளைச் சுற்றி ஆரணங்குகள் கூட்டம் இருந்தாலும், விண்மீன்களின் நடுவிலே வெண்ணிலவு போலத் திகழ்பவள் அவள். உல்லாசமாகப் பொழுதுபோக்க எத்தனையோ வழிகள் இருந்தாலும், பந்து விளையாடுவதில் மட்டுமே பரிபூரண இன்பம் காண்பவள்.

ஒருநாள், தனியே இருந்த அவளுக்கு. தாங்க முடியாத தனிமை கொல்லவே, தனது இன்ப வழியான பந்தை எடுத்து, உப்பரிகை மீதிருந்தே ஆடத் தொடங்கினாள். தன்னை மறந்து பந்தாடும்போது, துள்ளிக் குதிக்க விட்ட பந்தானது,

வி. வி.-2