பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50



வீரர்கள் போரிடும் போது, பயங்கரமான ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொள்ளும்போது, இரத்தம் பீறிட்டுக் கிளம்பிக் கீழே வழிந்திட, தரையில் திட்டுத் திட்டாகத் தெரியும் அல்லவா தரையில் இரத்தம் தேங்கி நிற்காமல், உடனே உறைந்து போவதற்காக, அந்தப் பகுதியில் மணலைப் பரப்பி வைத்தார்கள்.

மணல் இரத்தத்தை வேகமாக உறிஞ்சிக் கொள்ளும் அல்லவா! ஆகவே, மணற் பரப்பினால் ஆக்கப்பட்ட, போரிடும் பரப்பையே Arena என்று ரோமானியர்கள் அழைத்தார்கள்.

அரக்கமனம் படைத்தவர்கள் அழிந்து போனார்கள். அதன்பின் காலக்கிரமத்தில், அநியாயம் மறைந்தொழியத் தலைப்பட்டது. அறவழியில் போட்டிகள் நடைபெறத் தொடங்கின. ஆனாலும், போட்டிக்குரிய இடம் அதே தன்மையில், மையத்தில், சுற்றிலும் இருக்கைகளை அமைத்த வண்ணமாக இடம் பெற்றிருந்ததால், Arena என்ற பெயரே நிலைத்துப் போயிற்று.

இப்பொழுது சுற்றிலும் பார்வையாளர்கள் அமர்ந்திருக்க, மையத்தில் விளையாடும் மேடை வேறு பலவிதப் பொருட்களினால் அமைக்கப் பெற்றிருக்கிறது. என்றாலும், மணல் என்ற பொருளில் உள்ள Arena என்ற சொல்லே இவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.