பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

11


அரிய சக்தியை, பெயரிட்டு எனக்கு அழைக்கத் தெரியாத, அந்த பெரிய சக்தியை, நான் கூறித்தானே ஆக வேண்டும்.

இயற்கையை நடத்திக் கொண்டிருக்கிற அந்த இனிய சக்தி, என்னை எந்தப் பக்கமும் போக விடாது; என் விருப்பத்திற்கும்கூட வாழ்ந்து கொள்ள விடாது. வழி நடத்தி வந்திருக்கிற விந்தைதான், என் வாழ்நாட்கள் முழுவதும் நடந்திருக்கிறது. இன்றும் நடந்துகொண்டிருக்கிறது.

நினைத்தாலே நெஞ்சம் சிலிர்த்துக் கொள்கின்ற அளவுக்கு, சலித்துக்கொள்கின்ற அளவுக்கு, ஒடுகிற தேர்ச்சக்கரத்திற்குப் போடுகிற முட்டுக்கட்டை போல, நிகழ்ச்சிகள் நடந்தன. நடந்தே தொடர்ந்தன.

எனக்கு ஏற்படுகின்ற விருப்பங்கள் எல்லாம், ஏற்பட்ட பல திருப்பங்களால் திசை மாறினவே தவிர, எனது இலட்சியப் பணியான விளையாட்டுத் துறையில் இலக்கியம் படைக்கும் பணியானது வேறுபடவும் இல்லை. மாறுபடவும் இல்லை. கூறுபடவும் இல்லை. கொள்கை மாறவும் இல்லை.

இங்கே நான் குறிப்பிடப் போகின்ற முக்கியக் கருத்தானது, என்னை வாழ்வித்து, வழி நடத்தி வைத்த இறைவனது தனிப்பெருங்கருணையைத்தான்.

மக்களால் விரும்பிப் படிக்கப்படுகின்ற கதைகள், நாவல்கள், குற்றவியல் கதைகள் போன்ற துறைகளில் பல புத்தகங்களை எழுதி வைத்துக்கொண்டு, அவற்றில் ஒன்றைக்கூட நூலாக்க முடியாமல், நொந்து வெந்து கிடந்த எழுத்தாளர்கள் பலரை, எனக்கு நன்றாகவே தெரியும்.

தடைகளையும் உடைத்தெறிந்து விட்டு, கடன்களை வாங்கி, கஷ்டப்பட்டு நூல்களைப் போட்டு விட்டு, விற்க முடியாமல் வேதனையடைந்த பல எழுத்தாளர்களை, எனக்கு நன்றாகவே தெரியும்.