பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். நவராஜ் செல்லையா

13

தான் பணியாற்றிய இடத்தின் மேல் அதிகாரிகளிடம், பந்தயத்திற்குப் போக வேண்டுமென்று விடுமுறை கேட்டான். அவர்கள் அனுமதி தரவில்லை. விடுமுறையும் தரவில்லை. அதிலும் ஏமாற்றம்தான். வேலையை உதறிவிட்டு, பயணத்தைத் தொடங்கினான். முயற்சி அவனை முன்னோக்கித் தள்ளியது. புறப்பட்டுவிட்டான்.

பணவசதியில்லாததால், அவனது பயணம் ஆடு மாடுகளை ஏற்றிச் செல்லும் சிறு படகிலே நடந்தது. அதற்காக அவன் களைக்கவில்லை. சளைக்கவில்லை. கவலைப்படவும் இல்லை. நேப்பிள்ஸ் என்ற நகரம் . வந்தடைந்தபோது,வழிப்பயணத்தால் அவன் உடலால் வாடவில்லை. ஆனால், உள்ளத்தை வாட்டிக் கலக்கும் நிகழ்ச்சி ஒன்று அங்கே நடந்தது.

அவன் கொண்டுவந்த பயணப்பை தொலைந்து விட்டது. பணம், உடை மட்டும் அல்லாமல், ஏதென்சுக்குப் போக எடுத்திருந்த ரயில் டிக்கெட்டும் சேர்ந்துதான் போய்விட்டது! யாரும் தெரியாத இடத்தில் அது மோசமான நிலைதான். அப்பொழுதும் அவன் நிலை குலையவில்லை.

எப்படியோ டிக்கெட்மட்டும் கிடைத்தது.போனதை நினைத்துப் புலம்பாமல், வந்ததை நினைத்து, மகிழ்ச்சியுடன் பயணத்தைத் தொடர்ந்தான். ஏதென்ஸ் நகரத்தை அடைந்தான். பயணம் வெற்றிதான்.

‘இன்னும் ஒருவாரம் இருக்கிறது போட்டி நடக்க. அதற்குள் நன்றாகப் பயிற்சி செய்து கொள்ளலாம்’ என்று இருந்த ஜேம்சுக்கு, மேலும் ஒரு அதிர்ச்சி அங்கே காத்திருந்தது.