பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

விளையாட்டு உலகம்

விரும்பத்தகாத முறையிலே வெற்றியையும் பரிசையும் பெறவிருந்த வீரன், 'வேறு வழி இல்லை, இனிமேல் பேசுகின்ற பொய் சபையேறாது' என்று நினைத்து உண்மையைப் பேசத்தொடங்கி விட்டான். பந்தயத்திலே கலந்துகொண்டது உண்மை. 40 கிலோ மீட்டர் தூரத்திலே 15 கிலோ மீட்டர் தூரம் ஓடிவந்ததும் உண்மை. அதற்குப் பிறகு?

பாதி தூரத்திலே அவனது காலின் தசைப்பகுதிகள் ஓட முடியாத அளவுக்கு இழுத்துக்கொள்ளவே, பந்தயத்தில் இருந்து விலகிக்கொள்வது என்ற முடிவுக்கு வந்து, நின்றும் விட்டான். பாதியிலே நின்று விட்டால் எப்படி? பந்தயம் நடக்கின்ற இடம்வரை போயாக வேண்டுமே? என்ன என்ன செய்வது? என்று யோசனை செய்துகொண்டிருக்கும்போது, கூடவே வந்து கொண்டிருந்த 'ஆட்டோ'வில் ஏறி உட்கார்ந்து கொண்டான். வண்டியில் ஏறி அமர்ந்ததும், வலியும் வேதனையும் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது.

பல ஓட்டக்காரர்கள் இவன் வண்டியில் ஏறி அமர்ந்ததைப் பார்த்திருக்கிறார்கள். இந்த வீரனின் அதிர்ஷ்டமோ அல்லது கெட்ட நேரமோ என்னமோ, அவன் ஏறிவந்த வண்டியும் பழுதடைந்துவிட்டது. அதுவும் ஓடாது என்ற நிலையில் இவன் இறங்கிக் கொண்டான். நடக்கத் தொடங்கியபோது, காலில் பிடிப்பு இல்லை என்று உணர்ந்ததும், ஓடத் தொடங்கினான். ஓட்டமும் தொடர்ந்து, பந்தய மைதானத்துக்குள்ளும் வந்துவிட்டான்.

எல்லோரும் எழுந்திருந்து இவனை வரவேற்று, கை தட்டியபொழுது, இவன் தன்னையே மறந்துவிட்டான்.