பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


25 ஆண்டுகளுக்குப் பிறகு, கடிதம் மூலமாகவே தொடர்பு கொண்டுவந்த தந்தையை காணப் போகிறோம் என்ற நினைவிலேயே வந்த அந்த வாலிபன், தந்தையைக் கண்டதும் தாவிக்குதித்தான். இருவரும் ஆரத்தழுவிக் கொண்டனர். ஆனந்தக் கண்ணிர் அருவியாக வழிந்தது. 'இந்த ஜென்மத்தில் இப்படி ஓர் வாய்ப்பு 'என்று இருவரும் பேசிப்பேசி இன்பத்தை பகிர்ந்து கொண்டனர்.

தன் தந்தை வேறு ஒருத்தியை மணந்து, ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையாக ஆனபோதிலும் அவன் வருந்தவே இல்லை.

'இவரா என் தந்தை! என்று இகழவில்லை... எங்கே எப்படி வாழ்ந்தாலும் இவரே என் தந்தை! அதுவே எனக்குப் போதும்' என்று சொல்லி மகிழ்ந்தான் . இப்படி வாய்ப்பளித்த விளையாட்டை வாழ்த்தினான். 'விளையாட்டு உடலை மட்டுமா வளர்த்துக் காப்பாற்றுகிறது? உறவையும் வளர்த்துக் காப்பாற்றும். ஒப்பற்ற புகழையும் வளர்த்துக் காப்பாற்றும் என்ற உண்மையையும் கண்டு கொண்டேன்' என்று வாயினிக்கக் கூறினான் வாங்-காங்-கெங் என்ற அந்த வீரன்.

சீனாவில் இருந்த மகனையும், தாய்லாந்தில் இருந்த தந்தையையும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்க வைத்து பேசவைத்த விளையாட்டின் பெருமைக்கு ஈடு இணை ஏது? விளையாட்டு உலகில் வாங்-காங்-கெங் போன்று எத்தனையோ வீரர்களையும், வீராங்கனைகளையும் நாம் இனி சந்திக்க இருக்கிறோம் . உண்மையாகவே விளையாட்டினை விரும்பி, உற்சாகமாக உழைத்தும் உறுதியாக முயற்சி செய்தும் பலர் உயர்ந்தார்கள். உன்னதமான புகழையும் அடைந்தார்கள் . வாழ்க்கையிலும் போட்டிகளின் போதும் நிகழ்ந்த சுவையான சம்பவங்களை இனி தொடர்ந்து நாம் காண்போம்.