பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


6. தீமையிலும் நன்மை

கிரிக்கெட் ஆட்டம் 'சிறந்த பண்புள்ளவர்கள் ஆடும் ஆட்டம்' என்ற பெயர் பெற்றதாகும். ஆனால், அதில் பங்கு பெற்றவர்களில் பலர் வம்பர்களாகவும், விதண்டாவாதக்காரர்களாகவும் விளங்கிய காரணத்தால்தான், விளையாட்டில் பல புதிய விதிகள் தோன்றின என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!

'தீமையில் நன்மை' என்பார்களே அதுபோல, ஒரு தீமைதான் ஒரு புதிய விதி, கிரிக்கெட் ஆட்டத்தில் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது. அதுவே, ஒரு பூரண திருப்தி தரும் செயலாகவும் மலர்ந்து மிளிர்ந்தது.

கிரிக்கெட் ஆட்டத்தில் பந்தடித்தாடும் மட்டையானது (Bat) இந்த அளவில், இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு விதி முறை இல்லாதிருந்த காலம்; அந்தந்த ஆட்டக்காரர்கள் அவரவர்க்கு விருப்பமான தன்மையிலேயே பந்தடித்தாடும் மட்டையைக் கொண்டுவந்து ஆடலாம். அப்படித்தான் 1744ஆம் ஆண்டுவரை கிரிக்கெட் ஆட்டம் தொடர்ந்துவந்தது.

ஹேம்பில்டன், செர்ட்சி எனும் இரு குழுக்களுக்கு இடையே ஹேம்பில்டன் எனும் இடத்தில் 1771ஆம் ஆண்டு கிரிக்கெட்போட்டி ஒன்று நடைபெற்றது. அந்தப்போட்டிக்கு ஆயிரம் ரூபாய்க்குமேல் பந்தயப் பணமும் கட்டப்பட்டிருந்தது. பந்தயத்தில் தோற்க யாருக்குத்தான் ஆசை வரும்! கட்டுக்கடங்காத ஆசையுள்ள ஒரு ஆட்டக்காரன்; ஆட்டத்தில் பங்குபெற வந்தான்! எப்படி?

செர்டிசி குழுவினர் பந்தெறியும் வாய்ப்புப் பெற்று மைதானத்தில் நின்றபோது, பந்தடித்தாட தாமஸ் ஒய்ட் என்பவன் தனது பந்தாடும் மட்டையுடன் வந்து, விக்கெட்டின் முன்னே நின்றான். பார்த்தவர்களுக் கெல்லாம் பகீர் என்றது.