பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



51

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வையாளர் பகுதியில் நிற்கிறான். இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருந்த பந்து வெடித்துக் கிடக்கிறது. அச்சமும் ஆச்சரியமும் நிரம்பிவழிய, எல்லோரும் அவனையே பார்க்கின்றனர். அதிகாரிகள் பலர் ஓடிவருகின்றனர். அவனைக் கைது செய்துகொண்டு போகின்றனர்.

அந்த இளைஞன், பாஸ்டியா (Bastia) என்பது அவன் பெயர். அவன் கூறுகிறான். "இத்தாலி நாட்டுக்குழுவின் ரசிகன் நான். இத்தாலியக் குழுவே வெல்ல வேண்டுமென்று நான் விரும்பினேன். வேண்டிக் கிடந்தேன். விளையாட்டை ஆவலுடன் பார்த்துக்கொண்டு வந்தேன். தடுப்பவர் யாருமின்றி அந்தப் பந்து இத்தாலியக் குழுவின் இலக்கிற்குள் போவதை என்னால் சகிக்க முடியவில்லை. என்னால் தடுக்கவும் முடியாது. நிச்சயம் பந்து இலக்கிற்குள் செல்கிறது என்பதை என்னால் தாங்க முடியவில்லை. உடனே என் கைத்துப்பாக்கியை எடுத்து பந்தை சுட்டுவிட்டேன். பந்து இலக்கிற்குள் போகவில்லை. இத்தாலியக் குழுவை, நான் விரும்பும் எனது குழுவை, தோல்வியிலிருந்து தடுத்து விட்டேன்" என்று அந்த இளைஞன் தன்னை விசாரித்த அதிகாரிகளிடம் விளக்கினான்.

பாஸ்டியா நோக்கத்தைப் புரிந்து கொண்டாலும், அவனது நோக்கம் யாருக்கும் தீங்கிழைப்பதாக இல்லை என்று தெரிந்து கொண்டாலும், அந்த இளைஞன் தண்டிக்கப்பட்டான், அதாவது முறையாகத்தான்.

பயங்கரமான ஆயுதம் ஒன்றை அனுமதி இல்லாமல் வைத்திருந்தான் என்பதற்காக பாஸ்டியாவுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. விளையாட்டை விளையாட்டு என்று எண்ணாமல்,அதுவே பேரிழப்பு,பெரிய காரியம் என்று எண்ணிய பாஸ்டியா, பரிதாபமாக சிறைக்குள் புகநேர்ந்தது.