பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்

62


25. மன்னனும் மனிதன்தான்!

ஒரு கிரிக்கெட் போட்டி ஆட்டம் நடைபெறுகிறது என்றால், குறைந்தது 20,000 பேர்களாவது உட்கார்ந்திருந்து பார்த்து, மகிழ்கின்றார்கள். கிரிக்கெட் ஆடத் தெரியாவிட்டாலும், அதைப்பற்றி என்னவென்று கூட புரிந்துகொள்ள முடியாவிட்டாலும்கூட, கிரிக்கெட் வர்ணனைக் கேட்பது, மற்றவர்களிடம் தனக்குத் தெரிந்தது போல் நடிப்பது எல்லாம் ஒரு 'பேஷன்' ஆக இப்பொழுது நடைபெறுகிறது.

ஆனால், கிரிக்கெட் சரியாக வளர்ச்சியடையாத நாட்களில்கூட, பிரபுக்கள், பெரும் பணக்காரர்கள் இடையே இப்படித்தான் இந்த ஆட்டம் அதிகபிரபலம் அடைந்திருந்தது. பின்னர் அவர்களுக்கிடையே இருந்து கொஞ்சங் கொஞ்சமாக அரச பரம்பரைக்கும் போய் ஆரத் தழுவிக்கொண்டது.

அதன் காரணமாக, அரசர்களின் ஆதரவுமட்டு மில்லாமல், அரசகுடும்பமே ஆடியும் பார்த்தும் மகிழ்கின்ற தன்மையில் கிரிக்கெட் வளர்ந்தது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து நாட்டில், மன்னர்கள் இந்த ஆட்டத்தின் மேல் எல்லையில்லா அன்பும் ஈடுபாடும் காட்டி வளர்த்து வந்தார்கள்.

ஆட்டத்தின் முன்னே மன்னனும் மண்ணில் உழைக்கும் விவசாயியும் ஒன்றுதான் என்பார்கள். மன்னன் என்று பார்த்து பயந்து, பந்து ஒதுங்குமா! அல்லது தாக்காது போய்விடுமா!

பண்பாளர்கள் ஆடுகின்ற ஆட்டம் என்று பேர்பெற்ற ஆட்டத்தில் பற்று வைத்திருந்தவர்களைவிட பைத்தியமாயிருந்தவர்கள், இருப்பவர்கள்தான் அதிகம் என்றால், இது மிகையான கூற்றல்ல. உண்மைதான்.