பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்

96



1870ம் ஆண்டு, ஜூன் மாதத்தில் ஒருநாள் லார்டு மைதானத்தில் M.C.C. குழுவிற்கு எதிராக இவர் விளையாடியபொழுது, எதிர்பாராமல் ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டது. அதாவது, ப. பிளேட்ஸ் என்பவர் அடித்த பந்தானது, எகிறி வந்து இவர் தலையைத் தாக்கி விட்டது.

இந்தச் சம்பவம் எதிர்பாராமல் நடந்ததுதான். ஆனால், அந்த விபத்தை மிகவும் எச்சரிக்கையுடன் அணுகி, கவனமாக இருந்திருந்தால் சம்மர்ஸுக்கு ஒன்றும் நேர்ந்திருக்காது. அவர் செய்த தவறினால், அதாவது அவர் காட்டிய அலட்சியப் போக்கினால், அவரது உயிருக்கே அது ஆபத்தாய் முடிந்துபோனது.

ஆமாம்! தலையில் பந்தடிபட்ட நான்காம் நாள் சம்மர்ஸ் இறந்து போனார். தலையில் பலத்த அடிபட்டு, உயிர் பிழைத்தவர்கள் எத்தனையோ பேர்கள் இருக்கின்றார்கள். இவருக்கு ஏன் இந்த அவல நிலை ஏற்பட்டது? இதன் காரணத்தை அறியும்பொழுது நமக்கு அவர்மேல் இரக்கத்திற்கு பதிலாக எரிச்சல்தான் வருகின்றது.

தலையில் பந்தடி பட்டதும் சம்மர்சுக்கு, தகுந்த மருத்துவங்களை செய்திருக்கின்றனர் உடனிருந்தோர். வைத்தியத்திற்குப் பிறகு அவர் முழு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அதுதான் முறை. ஆனால், அவர் தன்னை ஒரு இரும்புமனிதர் என்று எண்ணிக் கொண்டார் போலும்! தன் உடம்பு எலும்பாலும் சதையாலும் இரத்தத்தாலும் ஆன ஒரு கலவை என்பதை அறவே மறந்து விட்டார் போலும். தலைக்காயத்தை அவர் மறந்த விட்டார்.

ஓய்வெடுக்காமல் தன் வீட்டுக்குள்ளேயே வேறுவேலை எதையாவது செய்துகொண்டிருந்தாலும் பரவாயில்லை. அவர் மற்றவர்கள் கூறிய அறிவுரையையும் மிறி, முரட்டுத்தனமாக, பிடிவாதமான, காரியத்தை செய்யத் துணிந்தார்.