பக்கம்:வீர காவியம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

12

கலகலவென் றொலித்துமரம் தலைய சைக்கக்
      காற்றுலவுங் கனிச்சோலை சூழும் நாடு;
சலசலவென் றார்த்தருவி இறங்கும் சாரல்
      சந்தனமும் அகில்தேக்கும் காட்டும் நாடு;
நிலமுழுதும் செந்நெல்லும் செங்க ரும்பும்
      நீள்கமுகு வாழையொடு செழிக்கும் நாடு;
பலவளமும் கெழுமிநலம் ஓங்கும் இந்தப்
      பழநாட்டை ஆண்டிருந்தான் மதலைக் கோமான்.3

வளம்பொலிந்து நிலங்கொழிக்கச் செய்யும் ஆற்றின்
      வடபுலத்தே நாவலநா டென்று சான்றோர்
விளம்புகின்ற பேர்படைத்த பெருநா டொன்று
      விளக்கமுறு தொல்புகழாற் சிறப்புற் றோங்கும்;
களம்புகுந்து திறங்காட்டி வாகை சூடிக்
      களிக்கின்ற தொகைமறவர் சூழும் நாட்டில்
இளம்பருவப் பெருங்கனகன் செங்கோ லோச்சி
      இணையில்லாச் சூழ்ச்சியினால் மேன்மை பெற்றான்.4

இனத்தாலும் மனத்தாலும் பண்பாட் டாலும்
      இருவேறு நெறியினவாய் இயங்க லானும்,
தனத்தாலுங் குணத்தாலும் வேறு பட்டுத்
      தனித்தனியே ஆட்சிமுறை நடத்த லானும்,
முனைப்பாலும் நினைப்பாலும் பகைமை விஞ்சி
      முரண்பட்டுப் பலகாலும் சமரே வேண்டும்
வினைப்பாலிற் கொலைப்பாலில் மூழ்கி மூழ்கி
      விளம்பியஅவ் விருநாடும் மகிழ்ந்து நிற்கும்.5

-----------------

கெழுமி-பொருத்தி. சமர்-போர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/15&oldid=1354166" இலிருந்து மீள்விக்கப்பட்டது