பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

பகை நடுவே பயணம் நடத்துகின்ற உதயணனை மற்றவர்கள் காணின் துன்பம் நேரும் என்று கருதியவன்போல விரைவில் இருள் வருவதற்காகக் குடகடல் குளித்துக் குடமலை மறைந்தான் கதிரவன்.

சுற்றிப் பகைவர் இருப்பரோ என்ற ஐயம் இருப்பினும் இருளும் ஒளியும் கலந்து மயங்கும் அந்த மாலை நேரம் மிகவும் இரம்மியமாக இருந்தது. மருத நிலங்கள் சூழ்ந்த வழியின் அழகில் தங்களையே மறந்து இன்பவெள்ளத்தில் மிதப்பது போன்ற களிப்புணர்ச்சியோடு சென்றனர் அவர்கள். பொய்கைகள் தோறும் நீலம், கழுநீர், நெய்தல் முதலிய பூக்கள் மலர்ந்த நிலைமாறி, ‘உதயணன் இன்பமாக நகர் சென்றடைக’ என்று கைகூப்பி வேண்டிக் கொள்ளுவதுபோலக் குறுந்தொடி மகளிர் கூப்பிய கரமெனக் குவிந்தன. வான வெளி எங்கும் பறந்து திரிந்த பறவைக் கூட்டங்கள் பலவகை ஒலிகளுடன் தத்தம் கூடுகளை அடைந்தன. பகலின் வெம்மை தணிந்து இரவின் மென்குளிர் எங்கும் பரவியது. மாலைப் பொழுது, உலகை இன்பமயக்கம் செய்துவிட்டு விடை பெறத் தொடங்கியது. இரவுக் கன்னி நீலக் கரும்பட்டாடை போர்த்து வந்தாள். அவர்களுடைய பயணம் தொடர்ந்தது. பகைவர்களைப் பற்றிய கவலையும் மெல்ல மெல்ல மறைந்தது. சூழ்நிலையும் நேரமும் ஒன்று கூடும் போது பற்றி நிற்கும் தொல்லைகளை மறந்து சுற்றியுள்ள அழகை இரசிக்க ஆரம்பித்தல் மனித இயல்பு. உதயணனும் வாசவதத்தையும் காஞ்சனையும் வயந்தகனும் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன? பகை பின்பற்றித் துரத்தியது உதயணனை. அவனோ தன் பயணத்தைச் சூழ்நிலை அழகில் முழுக்க முழுக்க ஈடுபடுத்திக் கொண்டே நடத்துகிறான்.

“நாளை எப்படியும் தத்தையைக் கோசாம்பி நகரில் உதயணனுடைய அரண்மனை ஆயமகளிர் எதிர்கொண்டழைக்குபடிக் கோசம்பி சென்றடைவேன்” என்ற உறுதியை மேற்கொண்டதுபோல விரைந்து சென்றது. பத்திராபதி என்னும் அந்த யானை. இவ்வாறு விரைந்து ஓடிய பிடியின் ஒட்டம், மென்மையை அன்றி வேறு உணர்வுகளைப்