இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வெள்ளியங்காட்டான் கவிதைகள்
அற்பரை யனுகாதே - நல்ல
அறிஞரை யகலாதே
கற்பவை கற்றால் நாம் - அன்றே
கயமைகள் கழிந்துவிடும் !
பொழுதினைப் போக்காதே - நல்ல
புலமைபொய் யாக்காதே
எழுதிய தேற்றால் நாம்-அன்றே.
இழிவுகள் ஏகிவிடும் !
ஆத்திர மடையாதே - நல்ல
அறிவினைக் கடியாதே
நாத்திற மடைந்தால்நாம் - அன்றே
நலிவுகள் நகர்ந்து விடும் !
சித்தம் மயங்காதே - நல்ல
செயல்களில் தயங்காதே
புத்தியில் பொலிந்தால்நாம் - அன்றே
புன்மைகள் பொன்றிவிடும் !
ஆசையி லழியாதே - நல்ல
அன்பினைப் பழியாதே
தேசினில் திகழ்ந்தால்நாம்- அன்றே
தீதுகள் தீர்ந்துவிடும் !
உய்முறை யுதறாதே- நல்ல
உண்மையைச் சிதறாதே
மெய்வழி மிளிர்ந்தால்நாம் - அன்றே
மிடிமையும் மெலிந்துவிடும் !
நல்லதை நசுக்காதே - நல்ல
நட்பினைக் கசக்காதே
அல்லதை அழித்தால்நாம் - அன்றே
அவலமு மகன்றிடுமே !