வெள்ளியங்காட்டான் கவிதைகள்
வாழி பொழுது
பொழுது புலரும் பொழுதி லொளியாய்ப்
புகுந்து புலர்கிறது
பொழுது மறையும் பொழுதி லிருளாய்ப்
புகுந்து மறைகிறது !
நீரும் நிலமும் வளியு மொளியும்
நெருங்கி நீங்கி நெடும்
போரும் புகலும் புரிந்திவ் வுலகைப்
போற்றிக் கொள்கிறது !
இவ் வுலகும் பந்தை யொத்திங்
கிருந்து சுழல்கிறது
விந்தை யுயிரும் உள்ளும் வெளியாய்
விரும்பி யுழல்கிறது !
சீவன், விதையாயிருந்து சிறந்த
செடியு மாகிறது
பூவும் காயாய்ப் பொருந்தும் விதையாய்ப்
புதுமை கொள்கிறது !
கோழி முட்டை யிட்டுக் காத்துக்
குஞ்சு பொரிக்கிறது
வாழும் குஞ்சே கோழி யாகி
வாழ்வு கொள் கிறது !
அருவ மான வளியு மொளியும்
ஆவி யாகிடவும்,
உருவமான நீரும், நிலமும்
உடலு மாகிடவும்,
வாழி பொழுதே வாழி யென்று
வரவ ழைத் திடுவோம் !
வாழி பொழுதே வாழி யென்று
வழிய னுப் பிடுவோம் !
142