கவிஞர் வெள்ளியங்காட்டான்
குமரியங் கோட்டி லிருந்துபன் னுறு
கோலக் குவடு குளிர்புன லாறு :
நிமிர்ந்திடும் தென்னை நிகரற்ற வாழை !
நெல்கரும் பேரி நிலைகளில் தாழை !
இமயம் முடியத் திகழ்ந்திடு மன்னை !
எங்கட் குறைவிட மாகிய வுன்னை !
தமிழில் வினவுகின்றோம்தவித் தின்று !
தரும மெதுவென்று சாற்றினி யென்று !
நீரினைக் கண்டு நிலத்தினில் தேக்கி,
நீசச் செடிகொடி நில்லாது நீக்கி,
ஏரினைப் பூட்டி யுழுபவர் நாங்கள் !
ஈரத்தில் நாற்று நடுபவர் நாங்கள் !
கோரும் பொருள்விளை விப்பவர் நாங்கள் !
குவலய முண்ணக் கொடுப்பவர் நாங்கள் !
பாரில் படுகின்ற துயர்களிலொன்று
பகளினும் பாரத மாய் விடு மின்று !
ஏதுக்குப் பெற்றனை யெங்களைத் தேவி !
ஏழைக ளாகி யிறக்கவோ பாவி !
சாதிக்குச் சாதி யுயர்வென்று சாற்றி,
சாத்திரம் சட்டம் சதிநிறைவேற்றி,
சூதுக்குள் ளாக்கிச் சுதந்தரம் தாழ்த்தி,
சூத்திரப் பட்டமும் கட்டினர் வாழ்த்தி !
நீதிக்கும் நெஞ்சுக்கும் நேர்பட நின்று
நேர்மை யெதுவென்று கூறுக இன்று !
இரும்பினைக் காய்ச்சி யுருக்குவோர் நாங்கள்
எந்திர மாக்கி யியக்குவோர் நாங்கள் !
கரும்பினில் சாற்றைப் பிழிபவர் நாங்கள் !
கற்கண்டு சர்க்கரை செய்பவர் நாங்கள் !