இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1.பால காண்டம்
கங்கைக் கரையில்
ஒரு மாலைப் பொழுது
யாருமறியாமல் புது வெள்ளத்தில்
அவள் -
நிர்வாணமாகக் குளிப்பதுபோல்
செக்கர்வான் வெள்ளத்தில்
செங்கதிர்க் குளியல்...
பாதி உடம்பு தெரிய.
தர்ப்பை அறுக்கும்
சின்ன அரிவாளாக
வானில் ஒட்டிக் கொண்டிருந்த
மூன்றாம் பிறை, அவள் கண்ணெதிரில்
நழுவி
ஆற்று வெள்ளத்தில் விழ
ஆவலோடு
அதையே
பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்!
பூப்படைந்த கணத்தில்
உள்ளத்திலும்
உடலிலும் ஏற்பட்ட
அதே அதிர்ச்சி கலந்த
குறுகுறுப்பு அவளுக்கு!