பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

வேங்கடம் முதல் குமரி வரை

மேற்பார்வையில் இருக்கிறது. 1400 ஏக்கர் நன்செய் நிலமும், 300 ஏக்கர் புன்செய் நிலமும், வருஷத்துக்குச் சர்க்கார் தரும் ரூ. 2479-ம் அந்தத் தேவஸ்தானத்தின் சொத்து என்றால் கேட்கவா வேண்டும்? நிர்வாகம் சிறப்பாக நடக்கிறது. தருமபுரத்து ஆதீனத்துக்கோயில் ஆனதினாலே கோயில் மிகவும் சுத்தமாக வைக்கப்பட்டிருக்கிறது. கோயில் மூன்று பகுதியாக இருக்கிறது. பெரிய பகுதியில் இறைவன் தோணியப்பர், சட்டைநாதர் எல்லாம். வட பக்கத்தில் திருநிலை நாயகி கோயிலும் அக்கோயிலின் முன் உள்ள பிரம தீர்த்தமும். இந்தத் தீர்த்தக் கரையிலேயேதான் ஞானப்பால் உண்டிருக்கிறார் ஞானசம்பந்தர், இரண்டு கோயில்களுக்கும் இடையில் மேற்குக் கோடியில் ஞானசம்பந்தருக்குத் தனித்ததொரு கோயில்.

கோயிலில் நுழைந்து ஆஸ்தான மண்டபத்தைக் கடந்ததும் கர்ப்பக்கிருஹம் சென்று லிங்க உருவில் இருக்கும் பிரமபுரி ஈசுவரரை வணங்கலாம். அவருக்கு வலப்பக்கத்தில் மகா மண்டபத்தில் ஞானசம்பந்தர் உற்சவ மூர்த்தியாக இருக்கின்றார். அவர் சின்னஞ்சிறு குழந்தை வடிவினர் ஆனதனாலே, வயிர நகைகளும், பட்டாடைகளும் உடுத்தி, அழகாகவே நிற்பார். வஸ்திரங்களையெல்லாம் களைந்து விட்டுப் பார்த்தால், அந்தப் பிள்ளையின் முகத்தில் பால்வடியும். கையிலே வழக்கமாக இருக்கும் பொற்றாளம் இராது. இடது கையில் சிறு கிண்ணம் இருக்கும். (அம்மை அருள் ஞானத்தைக் குழைத்துக் கொடுத்த பால் கிண்ணம் அதுவே போலும்.) வலது கையோ தோடுடைய செவியனாம் தோணி புரத்தானைச் சுட்டிக் காட்டும். இந்த ஞான சம்பந்தரையும் தரிசித்து வணங்கிவிட்டு, கோயிலின் மேற் பிராகாரத்திலுள்ள கட்டு மலைமீது எளிதாக ஏறலாம்.

அங்கே அந்த மலை மீது குருமூர்த்தமான தோணியப்பர் பெரிய நாயகி சமேதராகக் காட்சி