பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

101

கொடுக்கிறார். அவருக்கும் மேல் தளத்திலே, மலை உச்சியிலே தென் திசை நோக்கியவராயச் சட்டைநாதர் நிற்கிறார். தோணியப்பரும் சட்டைநாதரும் சுதையாலான திருவுருவங்களே. இந்தப் பேரண்டத்தைச் சுற்றி வளைந்து கிடக்கும் பெருங்கடல் ஊழிக்காலத்தில் பொங்கி எழுந்து அண்டத்தையே அழித்தபோது, உமாமகேசுவர் பிரணவத்தை தோணியாகக் கொண்டு கடலில் மிதந்து, இத்தலத்துக்கு வந்து தங்கித் திரும்பவும் அண்டத்தை உருவாக்கியிருக்கிறார். (ஆம்! பைபிளில் வரும் Deluge என்னும் மகா பிரளயமும் Noah's Arc என்னும் தோணியும் இதனையே குறிக்கின்றன போலும்) அன்று அப்படி வந்த தோணியப்பரே இன்று தோணி ஒன்றும் இல்லாமலேயே இக்கட்டு மலையில் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இரணியனது உயிர் குடித்த நரசிங்கம் அகங்கரித்துத் திரிந்தபோது அதனை அடக்கி, அதன் எலும்பைக் கதையாகவும், தோலைச் சட்டையாகவும் தரித்த வடுக நாதரேசட்டைநாதர் என்று தலவரலாறு கூறும். இது சிவனது பைரவ மூர்த்தங்களில் ஒன்று. இவரையே ஆபத்துத்தாரணர் என்று மக்கள் வணங்குகின்றனர். இவரையே,

“துங்க மாமணித் தூணில் வந்து,
இரணியன் தோள் வலி
தனை வாங்கும்
சிங்கஏற்று உரி அரைக்கு அசைத்து,
உலகு எலாம் தேர்ந்து அளந்து
அவன் மேனி
அங்கம் யாவும் ஓர் கதையதாய்க்
கொண்டு, அதன் அங்கியாய்ப்
புனைகாழி
சங்கவார் குழைச் சட்டைநாயகன்
துணைத் தாமரைச்
சரண் போற்றி”