பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

107

ரதவீதியைக் கடந்து கீழை ரதவீதி வழி வந்து கீழைக் கோபுர வாயில் வழியாகவே உள் நுழையலாம்.

ராஜ கோபுரத்தைக் கடந்த உடனே அங்கிருக்கும் வெளி அத்தனையையும் ஆக்கிரமித்துக் கொண்டு பெரியதொரு வேப்ப மரம் நிற்கும். அந்த மரமே இங்கு தலவிருட்சம். அந்த மரத்தடியிலேயே மேற்கே பார்த்தவராக இருக்கிறார் ஆதி வைத்தியநாதர். இந்த இடத்தையே வேம்படி மால் என்று கூறுவார்கள். இந்த ஆதி வைத்தியநாதரிடம் நாம் நம் நோய்க்கு மருந்து பெற முடியாது. வியாபாரம் பெருத்துவிட்ட காரணத்தால் கடை முதலாளி கோயிலுக்கு உள்ளே போய்விட்டார் என்பர். கோயிலுக்குள்ளிருக்கும் புதிய வைத்தியநாதரே, எல்லா நோய்களுக்கு கண்கண்ட மருந்தான திருச்சாத்துருண்டை வியாபாரம் செய்து வருகிறார். இந்த மருந்து பெற விரும்புபவர் சுக்கில பக்ஷத்தில் நல்ல நாழிகையில் அங்குள்ள சந்தான தீர்த்தத்தில் நீராடி, அங்குள்ள மண்ணை எடுத்துப் புதுப்பாத்திரத்தில் வைத்து, கோயிலுள் வந்து விபூதி குண்டத்தில் உள்ள விபூதி, சித்தாமிர்த தீர்த்தத்திலுள்ள தண்ணீர் இவைகளையும் சேர்த்துப் பிசைந்து முத்துக்குமரர் முன்புள்ள குழி அம்மியில் இட்டு அரைத்துக் கடுகு அளவு உண்டைகள் செய்து, தையல்நாயகி திரு முன்பு வைத்து அருச்சனை செய்து எடுத்துப் போய் உண்ண வேண்டும் என்பர் கோயில் நிர்வாகிகளும், அர்ச்சகர்களும். இப்படியே சொல்லி யிருப்பார்கள் போலும் அன்று இக்கோயிலுக்கு வந்த காளமேகத்தினிடமும். உடனே அவர்,

மண்டலத்தில் நாளும்
வைத்தியராய்த் தாமிருந்து
கண்டவினை தீர்க்கின்றார்
கண்டீரோ?-தொண்டர்