பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

வேங்கடம் முதல் குமரி வரை

விருந்தைப் பார்த்து உண்டருளும்
வேளூர் என் நாதர்
மருந்தைப் பார்த்தால்
சுத்த மண்.

என்று ஏளனமாகவே பாடியிருக்கிறார். நான் கூடக் காளமேகம் கட்சிதான். திருச்சாத்துருண்டை உருட்டக் கஷ்டப்பட வேண்டாம் என்பேன். ஆதி வைத்தியநாதரைச் சுற்றி வளர்ந்திருக்கும் வேம்படியில் சும்மா அரை மணி நேரம் அப்படியே தங்கி இருந்து விட்டால், தீராத நோய் எல்லாம் தீர்ந்து போகுமே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது எனக்கு.

இப்படி நம் உடல் நோயைத் தீர்த்துக் கொண்டபின் உள நோயைத் தீர்க்கக் கோயில் உள்ளேயே நுழையலாம். பரந்து கிடக்கும் தெற்கு வெளிப் பிராகாரத்தைக் கடந்து பிரதான கோயில் மண்டபத்துக்கு வந்தால் தென்பக்கம் ஒரு பெரிய வாயில் இருக்கும். அதில் நுழைந்தால் சித்தாமிர்த தீர்த்தத்தினிடம் கொண்டு சேர்க்கும். காமதேனு பால் சொரிந்து இறைவனை அபிஷேகம் செய்ய, அந்தப் பால் பெருகியே இந்தத் தடாகம் நிரம்பி இருக்கிறது என்பர். இல்லை சித்தர் கணத்தர் இறைவன் திரு முடியில் கொட்டிய தேவாமிர்தமே இங்கு நிறைந்திருக்கிறது, அதனாலேயே சித்தாமிர்த தீர்த்தம் என்று பெயர் வந்தது என்றும் கூறுவர். இந்தத் தீர்த்தத்தில் ஒரு விசேஷம். இதில் பாம்பும் தவளையும் எப்போதுமே இருந்ததில்லை. ஏதோ சாதனந்தர் இட்ட சாபத்தால் நேர்ந்தது இது என்பர். இதனால் கொஞ்சம் துணிந்தே இக்குளத்தில் இறங்கலாம், குளிக்கலாம், நீச்சல் அடிக்கலாம். வேம்படி மாலில் தீராத வியாதி மிச்சம் இருந்தால் அது கட்டாயம் இத்தீர்த்தத்தில் குளித்ததும் தீர்ந்து போகும்.

இனி, கோயிலுள் நுழைந்து, கர்ப்பக் கிருஹம் சென்று வைத்தியநாதனைக் கண்டு வணங்கலாம், பின்னர்