பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

121

திருவாரூர் போக அவன் விரும்பியபோது தாசி சௌந்தரம் உடன் செல்ல மறுத்திருக்கிறாள். அதனால் மன்னன் தான். அவளுக்குக் கொடுத்த பொருளையெல்லாம் அவள் அறியாமல் கைப்பற்றியிருக்கிறான். கேட்டால் தனக்கு ஒன்றுமே தெரியாதே என்றும் சொல்லியிருக்கிறான். அவள் அப்படியே சத்தியம் செய்து தரச் சொல்லி திருக்குளத்துக்கு இழுத்திருக்கிறாள். பொய்ச் சத்தியம் பண்ண முனைந்த மன்னனைப் பாம்பைக் காட்டிப் பயமுறுத்தியிருக்கிறார் சிவலோகன், அதனால் சிற்சபேசன் வேண்டிய நிலபுலங்களைக் கோயிலுக்கு எழுதிவைத்து, தன்னை அண்டிய பழியினின்றும் நீங்கியிருக்கிறான் என்று கதை,

இந்தச் சிவலோகநாதர் இப்படி நிலங்களைச் சேர்த்தாரே தவிர, அவைகளை வைத்துக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியவில்லை. எப்படியோ கோட்டை விட்டுவிட்டார். அன்று சுந்தரர் தேடிக் கொடுத்ததும் பின்னர் சிற்சபேசன் எழுதிக் கொடுத்ததுமான நிலங்களெல்லாம் இன்று தேவஸ்தானத்தின் சொத்தாக இல்லை. ஏதோதனக்கு வேண்டிய கொஞ்ச நிலங்களையும் புலன்களையும் மாத்திரமே வைத்துக் கொண்டிருக்கிறார். (பின்னால் நில உடைமைக்கு உச்ச வரம்பு வரும், அது கஷ்டம் தரும் என்பதை யெல்லாம் தெரியாமலா இருந்திருப்பார்!)

திருப்புன்கூர் இறைவனை வழிபட்டு முத்தி பெற்றவர்கள் ஜாபிதா நிரம்பவும் நீளம். சூரியசந்திரர், இந்திரன், பிரம்மா, அகஸ்தியர், அக்கினி, பதஞ்சலி வியாக்கிரபாதர், சப்த கன்னியர் எல்லாம் வழிபட்டு முத்தியடைந்தனர் என்று தலபுராணம் கூறும். அறுபத்து மூன்று நாயன்மார்களில் விறல்மிண்டர், ஏயர்கோன் கலிக்காமர் எல்லாம் இங்குதான் முத்தி பெற்றார்கள் என்றும் அறிவோம். இத்தனை தெரிந்தபின் இத்தலம் ஏன் புன்கூர் என்று பெயர் பெற்றது என்று தெரிய வேண்டாமா? வேறு