பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

வேங்கடம் முதல் குமரி வரை

இருந்திருக்கிறது. இந்த வழக்கத்தை மூன்றாம் ராஜராஜனது அதிகாரிகள் தடை செய்திருக்கிறார்கள். கி.பி. 1230 ல் இப்படி ஏற்படுத்திய தடை சரியானதன்று என்று கிராம நிர்வாகிகளான கூற்றப் பெருமக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இவர்களெல்லாம் ராஜராஜ விண்ணகர் எம்பெருமானைக் காவிரிக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு பண்ணி அதற்குப் பாதை ஒதுக்க நிலங்களைத் தானம் கொடுத்திருக்கிறார்கள். இந்த நிலங்களை இறையிலி நிலங்களாகக் கணக்குகளில் பதிந்திருக்கிறார்கள். இதைக் கல்வெட்டிலும் எழுதி வைத்திருக்கிறார்கள். இன்னுமொரு ரசமான வரலாறு, மூன்றாம் ராஜராஜன் காலத்தில் முக்கிய படைத் தலைவனான கோப்பெருஞ் சிங்கனைப் பற்றியது. இந்தக் கோப்பெருஞ் சிங்கன் மைசூரிலிருந்த ஹொய்சலர்களை யெல்லாம் அடக்கி வெற்றி கண்டு கோப்பெருஞ் சிங்கன் பரகேசரி என்ற விருதுப் பெயரோடு சோழ நாட்டில் காவிரிக் கரையில் உள்ள கோயில்களுக்கு வந்து மூர்த்திகளைத் தரிசித்திருக்கிறான். அவன் ஆக்கூருக்குமே வந்திருக்கிறான். ஆக்கூர் மக்கள் அன்றைய வரிகளைக் கொடுக்க இயலாதவர்களாக வெளியூர் சென்றிருக்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்கள் கொடுக்க வேண்டிய வரிகளையெல்லாம் தள்ளுபடி செய்து, திரும்பவும் அவர்களை ஆக்கூருக்கே அழைத்துக் குடியேற்றியிருக்கிறான். சோழர் காலத்தில் மாத்திரம் என்ன? பின்னர் வந்த நாயக்க மன்னர்கள் காலத்திலும் ஆக்கூர் முக்கியத்துவம் வாய்ந்த கிராமமாகவே இருந்திருக்கிறது. கி.பி. 1517-ல் விஜயநகர மன்னன் கிருஷ்ணதேவராயர் தம்முடைய திக்விஜய ஞாபகார்த்தமாக, கோயில் நிலங்களுக்கு விதித்திருந்த வரி பதினாயிரம் வராகனை தள்ளுபடி செய்திருக்கிறார். அப்படி வரித் தள்ளுபடி செய்யப்பட்ட கோயில்களிலே இந்த ஆக்கூர் தான்தோன்றி மாடமும் ஒன்று என்று வரலாறு கூறுகிறது.

இந்த வரலாற்றை யெல்லாம் படித்துத் தெரிந்த நான், இந்தத் தலம் சென்றிருந்தபோது, அன்று அந்த நடுவிற்