பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வேங்கடம் முதல் குமரி வரை
இரண்டாம் பாகம்
பொன்னியின் மடியிலே
1

மயிலமலை முருகன்

நீலங்கொள் மேகத்தின் மயில் மீதே
நீவந்த வாழ்வைக்கண்டு அதனாலே,
மால் கொண்ட பேதைக்கு உன் மணம் நாறும்
மார் தங்கு தாரைத்தந்து அருள்வாயே.
வேல்கொண்டு வேலைப்பண்டு எறிவானே!
வீரங்கொள் சூரர்க்கும் குலகாலா!
நாலந்த வேதத்தின் பொருளோனே!

நானென்று மார்தட்டும் பெருமாளே! என்பது அருணகிரியார் பாடிய திருப்புகழ், முதல் நாலடிகளில், பழைய அகத்துறைப் பாடல்களின் மணம் சிறந்து வீசுகிறது. நீலமயில் வாகனனான முருகனைக் கண்டு காதலித்து மயக்கமுற்றுக் கிடக்கும் பேதைப் பெண்ணின் மயக்கம் தெளிவிக்க, அவன் மார்பிலே புரளும் மாலையையே வேண்டி நிற்கிறாள் தோழி. முருகனை நினைத்தால் மயிலை நினைக்கிறார்; மயிலை நினைத்தால் அவன் ஏந்திய வேலை நினைக்கிறார் கவிஞர். 'வேலுண்டு வினை இல்லை. மயிலுண்டு பயமில்லை' என்று தானே முருக பக்தர்கள் உள்ளத்தில் உரம் பெறுகிறார்கள். மயிலோடும் வேலோடும் முருகனைத் தொடர்பு படுத்தி முதன்முதல் அந்த அழகனைக் கற்பனை பண்ணியவன் சிறந்த கலைஞனாக இருந்திருத்தல் வேண்டும்.