பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

வேங்கடம் முதல் குமரி வரை

வழிபாட்டிலே திளைத்து நிற்பவர்கள் என்றாலும் தேவர்களுக்கும் தேவமாதர்களுக்கும் இடுக்கண் விளைக்கும் அசுர தர்மத்தையும் விட்டு விடவில்லை. தேவர்கள் எல்லோரும் கைலாசம் சென்று முறையிடுகிறார்கள், தமது பக்தர்களைத் தாமே அழிப்பது உசிதமில்லை என நினைந்து, துணைவியாம் மனோன்மணியையும் மைத்துனர் விஷ்ணுவையும் அனுப்பி வைக்கிறார். இறைவி தம் அம்சமும் அழகும் நிறைந்த காளி காதேவியை ஒரு இளங்கன்னியாகச் சிருஷ்டித்து அனுப்புகிறாள். இந்தப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு கிழவேதியர் வடிவில் வந்த விஷ்ணு, அம்பரன் அம்பன் வசிக்கும் அம்பர் என்னும் தலத்தில் ஒரு இடத்தில் வீற்றிருக்கிறார். அழகான கன்னிகையைக் கண்ட அசுரர்கள் இருவரும், பெண்ணைத் தங்களுக்குத் திருமணம் முடித்துக் கொடுக்கக் கேட்கிறார்கள். விஷ்ணுவும் இருவரில் ஒருவருக்குக் கொடுக்கச் சம்மதிக்கிறார். அதனால் அம்பரன் தன் தம்பி அம்பனைக் கொன்றுவிட்டுத் தானே கன்னியை மணந்து கொள்கிறான்.

கன்னிகையான காளியை அவன் தழுவியதும், அவள் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி அம்பரனைத் துரத்தி அவன் உயிரைக் குடித்து விடுகிறாள். அதன் பின் உலகம் காத்தலை மேற்கொண்டு காளி கன்னிகையாக அத்தலத்தில் கோயில் கொள்கிறாள். சிவபூசை செய்து அசுரர்களைக் கொன்ற பாவத்தைப் போக்கிக் கொள்கிறார்கள். அம்பரன் இருந்த ஊர் அம்பர், மகாகாளி கோயில் கொண்ட இடம் மகாகாளிபுரி என்று வழங்கப்படுகிறது, மகாகாள ரிஷி பூசை செய்து முத்தி பெற்ற இடம் ஆனதால் மகாகாளம் என்று பெயர் பெற்றது என்றும் ஒரு வரலாறு உண்டு. அன்று திருமால் வந்து வீற்றிருந்த இடத்தில் வீற்றிருந்த பெருமாள் கோயில் இருக்கிறது. காளியின் வடிவைப் பூசைக்குக்கூட ஒருவரும் இன்று தீண்டுவதில்லை. தூர இருந்து கோல் ஒன்றின் உதவியாலேயே ஆடை முதலியன சாத்தி