பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

வேங்கடம் முதல் குமரி வரை

நுழைகிறோம் இப்போது, அந்தப் பயணம் மயிலேறும் பெருமாளோடு துவங்குகிறது, மகிழ்ச்சிக்குரியதே.

இந்த மயிலத்தை அடைவது எளிது. சென்னை, திருச்சி ‘டிரங்க் ரோட்டில்' திண்டிவனத்துக்குத் தெற்கே எட்டாவது மைல்வரை வந்து பின்பு கிழக்கு நோக்கிப் பாண்டிச்சேரி செல்லும் வழியில் திரும்பினால், அந்த ரோட்டில் மூன்றாவது மைலில் நீண்டுயர்ந்த கோபுரத்தோடு கூடிய ஒரு சிறு குன்று தோன்றும். கோயிலை நோக்கிக் காரைத் திருப்பினால் முதன்முதல் நாம் காண்பது ஒரு தமிழ்க் கல்லூரி. இதை நிறுவியவர் சிவஞான பாலய சுவாமிகள். பொம்மையபுரம் மடாதிபதி இவர்கள். இவர்களது முன்னோர்களே மயிலத்து முருகன் கோயிலை உருவாக்கி யிருக்கிறார்கள். மலைமீதே காரைக்கொண்டு செல்ல ஒரு வழி அமைத்திருக்கிறார்கள். அதன் வழியே செல்லலாம் மலைமேலே. இல்லை, முருகன் ஊர்ந்து வரும் மயிலாம் மயில மலைமீது நாம் காரில் செல்லுவதாவது? என்று கருதினால் கல்லூரி வாயிலிலேயே காரை நிறுத்திவிட்டு, கற்களைப் பரப்பி அமைத்திருக்கும் பாதை வழியாகவே மலை ஏறலாம். இந்த மயிலமலை மிகச் சிறிய குன்றுதான். ஆதலால் ஏறுவது ஒன்றும் சிரமமாக இராது. இந்தப் பாதை வழியாகக் குன்றின்மீது வந்து சேர்ந்தால் கோயிலின் தெற்கு வாயிலுக்கு வந்து சேருவோம். கோயிலின் பிரதான வாயில் கிழக்கு நோக்கியிருந்தாலும் அந்த கோபுர வாயில் எப்போதும் அடைத்து வைக்கப்பட்டே இருக்கும். அதனால் தெற்கு வாயில் வழியாகவே கோயிலில் நுழைய வேணும்.

இந்த மயிலமலையும், இங்குள்ள கோயிலும் எப்படி உருவாயிற்று என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? முருகனோடு போர் செய்த சூரபதுமன் முருகன் எடுத்த பேர் உருவைக் கண்டு நல்லறிவு பெறுகிறான்.