பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

245

கொள்ள மறந்திருக்கிறார். அவர் மணந்த அந்த நறுஞ்சாந்து இளமுளையாளும் அத்திருவடிநிலைக்கு எதிர்ப்புறமாகவே இருக்கிறாள், பக்கத்திலேயே தெற்கு நோக்கியவளாக அத்தலத்து இறைவியான அரும்பன்ன வளமுலையாள் சந்நிதி. இன்னும் அந்த முற்றப் பெருவழியிலேயே தலத்துப்பிள்ளையார் துணைவந்த விநாயகர் இருக்கிறார். இவர்தான் அத்தன் அம்மையை மணக்க வந்தபோது உடன் வந்திருக்கிறார். (நல்லபிள்ளை, தகப்பனார் தாயாரைத் திருமணம் செய்து கொள்ள, ஆம். இரண்டாம் தடவையாகத் தான் வரும்போது தனயனான இவரும் அல்லவா உடன் வந்திருக்கிறார்.) இந்தத்தாயார், பிள்ளையையெல்லாம் வணங்கியபின் உட்கோயிலில் நுழையலாம். வாயிலில் இருக்கும் துவார பாலகர்கள் கம்பீரமானவர்கள்; நல்ல வண்ண வண்ண உடைகளை அணிந்தவர்கள். அவர்களிடம் அநுமதி பெற்றுக்கொண்டே அர்த்த மண்டபம் சென்று லிங்கத் திருவுருவில் உள்ள சொன்னவாறு அறிவாரைத் தரிசிக்கலாம். இவர் நல்ல வரப்பிரசாதி என்பதையும் அறியலாம். 'தொட்டது துலங்காது; தீண்டிய பொருள்கள் யாவுமே தீய்ந்து சாம்பலாகும்' என்ற பழிநீங்க அக்கினி இத்தலத்தில் வழிபட்டுப் பழிபோக்கிக் கொண்டிருக்கிறார்.

விக்கிரம சோழனுடைய மனைவி கோவளைக்குக் குட்டம் நீங்கியிருக்கிறது இங்கே. வருணனது சலோதரம் என்ற பெரு வியாதி நீங்கியதும் இங்கேதான். இன்னும் சூரியனுக்கும் பரத முனிக்கும் மற்றும் பலருக்கும் இருமை இன்பத்தை அளித்தவர் இத்தலத்து இறைவனே என்று தலவரலாறு கூறும். இத்தலத்துக்கு, சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் வந்திருக்கிறார்கள்; பதிகங்கள் பாடி இருக்கிறார்கள்.

உன்னி எப்போதும் நெஞ்சுள்
ஒருவனை ஏத்துமின்னோ,
கன்னியை ஒருபால் வைத்து
கங்கையைச் சடையுள்வைத்து