248
வேங்கடம் முதல் குமரி வரை
இடைபுகவில்லை . ஓர் அரசகுமாரன்; அவனுக்கு ஒரு பெண்ணை நிச்சயிக்கின்றனர். திருமணம் நடக்குமுன்னமே அரசிளங்குமரனின் தாய் தந்தையர் இறந்து விடுகின்றனர். அதனால் பெண்ணின் சுற்றத்தார் பெண் கொடுக்கத் தயங்குகின்றனர். இறைவனோ அரச குமாரனின் காதல் தாபத்தை அறிவார். அவரே அந்த நோய் வாய்ப் பட்டவர் என்பதைத்தான் முன்னமே பார்த்திருக்கிறோமே. அவர் சும்மா இருப்பாரா? தமது பூதகணங்களை விட்டு இரவுக்கிரவே பெண்ணைத்தூக்கிவரச்செய்து வேள்வி நடத்தித் திருமணத்தையும் முடித்து வைக்கிறார். பின்னர் தாமும் துணைவியுமாகத் திருமணக் கோலத்திலேயே நின்றுவிடுகிறார். இந்தக் கோயிலில் நல்ல அருமையான செப்புச் சிலைகள் பல இருக்கின்றன.
எல்லாவற்றிலும் மிக்கச் சிறப்பு வாய்ந்தது கல்யாண சுந்தரர், பரிமள சுகந்த நாயகியார் சிலைகள்தாம். புது மணப் பெண்ணாம் அந்த அம்மையின் ஒவ்வொரு அங்கமுமே நாண உணர்ச்சியை வெளிப்படுத்தும். ஆம்! திருமணத்துக்கு முன்பு கைதொட்டதற்கே கோபித்துக் கொண்டவள் ஆயிற்றே அவள். மணம் முடித்துக்