பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

வேங்கடம் முதல் குமரி வரை

மாடத்தில் இருக்கும் இந்தச் சிற்ப வடிவத்தைச் சுற்றிய சுவர்களிலே, சண்டீசர் கதை முழுவதுமே, சின்னச் சின்னவடிவில் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.

அன்னையையும் அத்தனையும் செதுக்கியதில் காட்டிய அக்கறையைச் சண்டீசரைச் செதுக்குவதில் காட்டவில்லை சிற்பி. நான் ஊகிக்கும் காரணம் இதுதான். கங்கைகொண்ட சோழனாம் ராஜேந்திரனுக்கே இறைவன் முடிசூட்ட முனைகிறான் என்ற குப்தமாகக் காட்டவே சிற்பி இச்சண்டீரனுக்கு கிரஹமூர்த்தியை உருவாக்கி யிருக்கிறான். சண்டீசனது முகத்தை ராஜேந்திரனது முகம் போலவே அமைத்திருக்கிறான். இதைக்கண்டு ராஜேந்திரன் உள்ளம் மகிழ்ச்சியுற்றாலும், வேண்டாத அலங்காரங்களை, அச்சிற்ப வடிவுக்குச் செய்யவேண்டாம் என்று கட்டளையிட்டுத் தன் பணிவைக் காட்டியிருக்கிறான். அதனால்தான் அரைக்குக்கீழே உள்ள பாகம் செம்மையாகச் செதுக்கப்பட வில்லை என நினைக்கிறேன். இந்தச் சிற்ப வடிவம் கலை உலகிலே பிரசித்தம். இந்த ஒப்பற்ற சிலைக்கு எதிர்த்த சுவரிலே, ஞான சரஸ்வதி கொலுவீற்றிருக்கிறாள். 'ஒன்றே யென்னில் ஒன்றே யாம்' என்று நமக்கெல்லாம் ஞான உபதேசம் செய்யும் நிலையில் இருக்கிறாள். இவளது அழகை வர்ணித்தல் இயலாது. சென்று கண்டு மகிழுங்கள் என்றுமட்டும் சொல்லவிரும்புகிறேன்.

இனி அந்த வடக்கு வாயில் வழியாகவே கோயிலுள் நுழையலாம், அர்த்த மண்டபத்தில் இருந்து கொண்டு மேற்கே திரும்பினால் கருவறையில் உள்ள பெரு உடையாரை, கங்கைகொண்ட சோழீச்சுரரைக் காணலாம். சாதாரணமாக லிங்கத் திருவுருவின் பரிவட்டங்களைப் பற்றிப் பேசும்போது மூன்று முழமும் ஒரு சுற்று (லிங்கத் திருவுருவைச்சுற்ற ) என்பார்கள். இங்கு அந்தப் பருப்பு எல்லாம் வேகாது. லிங்கத்திருவுருவைச் சுற்ற 15 முழம் வேணும்; ஆவுடையாரைச் சுற்றவோ ஐம்பத்து நாலு முழமே வேணும். 13அடி உயரத்தில் உயர்ந்திருக்கும் பெருஉடையார்,