பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

வேங்கடம் முதல் குமரி வரை

பழமலை-வடக்குக் கோபுரம்

நாயகியின் கோயிலுக்கு வரலாம். இந்தக் கோயிலே ஒரு பெரிய கோயில், ஏழு நிலைக் கோபுரத்தோடு, இங்குள்ள அலங்கார மண்டபம், இடைவெளி மண்டபம் எல்லாம் கடந்து கர்ப்பக்கிருஹம் சென்று பெரியநாயகியையும் தொழலாம்.

இக்கோயிலில் உள்ள கோஷ்டங்களில் கஜ சம்ஹாரர், மகிஷமர்த்தினி, துர்க்கை , நரசிம்மி (அதாவது நரசிம்ம வடிவம், ஆனால் தனங்களுடன் கூடிய பெண்ணுரு) எல்லாம் உண்டு. இவைகளைப் பார்க்கும்போது விருத்தகிரி ஈசுவரர் கோயிலுக்கும் முந்திக் கட்டப்பட்ட கோயிலே என்று தோன்றும். அம்பிகை விருத்தாம்பிகை என்றே அன்னையை அழைத்தாலும் அவள் முகத்தில் தெய்வக் களி துலங்கு நகையைக் காணலாம். கண்டு நாமும் மகிழலாம். இவள் தம் கோயிலை விட்டு நாம் வெளியே வருவதைக் கோயில் கோபுரத்திலுள்ள ஒரு குகையிலிருந்து மயில் வாகனான குமரன் கவனித்துக் கொண்டிருப்பதையுமே பார்க்கலாம். இவனையே குகை முருகன் என்கிறார்கள். இங்கேயே நாதசர்மா, அநவர்த்தினி எல்லாம் இருக்கிறார்கள். இவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து, பெரிய நாயகியை வணங்கி, சாரூப பதவி பெற்றவர்கள் என்று தல வரலாறு கூறும்.