பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தச் சாதனைக்கெல்லாம் காரணம் கட்டுரை ஆசிரியர் நம்மிடத்தில் வைத்திருக்கும் பரிவுதான். நம்முடைய உள்ளப் பாங்கை உணர்ந்து, நம் இதயத்தோடு ஒட்டிச் சமய உண்மைகளைப் பக்குவமாக்கிக் கொடுக்கும் வல்லமை அவரிடத்தில் இருக்கிறது.

‘பதி, பசு, பாசம்’ என்று மடிசஞ்சி பாஷையில் பேசி, அவர் நம்மை மிரட்டுகிறதில்லை. நாமெல்லாம் சினிமா உலகத்தில் ஊடாடிக் கொண்டிருப்பவர்கள் என்று அவருக்குத் தெரியும். ஆகவே ‘கடன்வாங்கிக்கல்யாணம்’ என்ற சினிமா படத்தைப் பற்றிப் பேசி, நம்மைத் தன் வசம் ஆக்கிக்கொண்டு, நம் கையைப் பிடித்துக்கொண்டே, ஏழுமலையும் ஏறி, ‘வான் நின்ற சோலை வடமலை மேல் நின்ற மாதவன்’ சந்நிதியில் கொண்டே நிறுத்தி விடுகிறார்.

நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று அவருக்குத் தெரியும். கலெக்டர் வேலை பார்த்தவருக்கு இது கூடத் தெரியாமலா இருக்கும்? ஆகவே ஜனநாயகத் தேர்தல் முறையைப் பற்றிப் பேசுவார். காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்போம். உடனே பத்தாவது நூற்றாண்டிலே ‘குடவோலை’த் தேர்தல் முறை எப்படி நடந்தது என்று சொல்லுவார். இதைப்பற்றி உத்திரமேரூர்க் கோயிலிலே ஒரு கல்வெட்டு இருக்கிறது என்று சொல்லி நம்மைக் கோயிலுக்கே இழுத்துச் செல்வார். அப்படியே உள்ளே யிருக்கும் வைகுண்டப் பெருமாள் முன்னிலையிலே கொண்டு போய் நிறுத்துவார். நம்மை அறியாமலேயே, பகுத்தறிவாளர்களாகிய நமக்கும் பக்தி வந்து விடுகிறது. இவ்வாறு விதம் விதமான உத்திகளைக் கையாண்டு நமக்குக் களிப்பூட்டுகிறார்.