பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

வளர்ந்து பேதைப் பருவம் எய்துகிறாள். பரமனை அடையக் கருதித் தவச்சாலை புகுந்து தவக்கோலம் கொள்கிறாள்.

தவத்திற்கு இரங்கிய இறைவன், 'இளமுலையே! நீ எனது வார்த்தையைக் கேட்காமல் தக்கன் வேள்விக்குச் சென்றாய். கொண்ட புருஷனின் சொல்லைத் தட்டிய பாவம் நீங்கினால்தான் உன்னை மனப்பேன்!' என்கிறான். அம்மையும், 'நானோ பேதைச் சிறுமி, பாவம் தீரும் வழியை அருள் வேண்டும்!' என்று வேண்டுகிறாள்.

அவனும், 'திருவோத்தூர் என்னும் தலத்துக்குச் சென்று என்னை நோக்கித்தவம் செய்!” என்கிறான்.

அப்படியே செய்து இளமுலைநாயகி இறைவனை மணந்து கொள்கிறாள். அம்மையின் திரு உரு அழகான ஒன்று. பேதைப் பருவத்திலே தவம் புரிந்து, பெதும்பைப் பருவத்திலே இறைவனை மணந்து கொண்டவள் அவள். மங்கைப் பருவத்தில் மணாளனை மணந்து கொண்ட நங்கையாக மற்றைய கோயில்களில் காட்சிதருபவளே, இந்தத் தலத்தில் இளவயதில் இறைவனை மணந்த பேதையாக நிற்கிறாள்.

சம்பந்தர் பாடிய பதிகம் ஒன்றைத் தவிர, இப்பதியைப் பாடிய பெருமக்கள் பலர். 'நிலவு புகழ் திருவோத்துர்’ என்று பட்டினத்தடிகள் பாடினால், 'சீலர் மென்சோலை சூழ் திருவோத்தூர்' என்று சேக்கிழார் பாடுகிறார்.

தல புராணம் ஒன்றும் பாடப்பட்டிருக்கிறது விரிவாக, காஞ்சிக்குத் தெற்கே பதினெட்டு மைல் தொலைவிலேயே இருப்பதால், அன்பர்கள் சென்று, இளமுலையாம் ஆத்தாள்தனைப் பணிந்து, அன்பால் துதித்து, அருள் படிந்து கூத்தாடிய தாள் உளத்து இருத்தி மீளலாம்.